Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செருப்பு இல்லாமல்.. விஜய் ஆண்டனிக்கு பதில் அளிக்கும் வகையில் சிவகங்கை மருத்துவர் உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: செருப்பு இல்லாமல் நடந்து பாருங்க..அதோடு அருமை உங்களுக்கு புரியும், ஒரு மாதம் நடந்து பாருங்க செம்மையாக இருக்கும் என்று நடிகர் விஜய் ஆண்டனியின் பேச்சு சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு பதில் அளிக்கும் வகையில் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லாவின் பதிவு ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா வெளியிட்ட பதிவினை அப்படியே அவரது மொழியில் பார்ப்போம். "சமீபத்தில் கிளினிக்கில் என்னை பல ஆண்டுகளாக நீரிழிவிற்காக சந்திக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறையின் உள்ளே நுழையும் போதே வெகுநாள் நாசிகளுக்குப் பழகிய துர்நாற்றம் வீசவே எனக்குத் தெரிந்து விட்டது.

Sivagangai health Vijay Antony

பாட்டி வந்திருப்பது காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்குத் தான் என்பது. ஆம்... வலது கால் பாதத்தில் பெரிய புண் அதில் முழுவதும் ஊர்ந்தும் நெளிந்தும் சில புழுக்கள் தென்பட்டன. புழுக்கள் தசை திசுக்களைத் தின்று மிச்சமுள்ள கழிவுகளில் இருந்து வரும் அந்த துர்நாற்றம் என்பது இதற்கு சிகிச்சை செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் பரிச்சயமான ஒன்றாகவே இருக்கும்.

நீரிழிவு நோயர்களுக்கு அதிலும் முதியோர்களுக்கு கணுக்காலுக்கு கீழே வரும் புண்கள் "அவசர நிலை" எமர்ஜென்சியாகும். காலம் தாழ்த்த தாழ்த்த, முதலில் விரல் பிறகு கணுக்கால் வரை பிறகு முழங்கால் மூட்டுவரை பிறகு மொத்த காலும் என்று பறிபோகும் உறுப்பின் சதவிகிதம் கூடிக்கொண்டே சென்று இறுதியில் தொற்று ரத்தத்தில் கலந்து, சிறுநீரகம் - கல்லீரல் - கணையம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளை பாதிப்புக்குள்ளாக்கி செப்சிஸ் எனும் அபாய நிலையை அடைந்து மரணம் வரை இட்டுச் செல்லும்.

இத்தகையதோர் நிலைக்கு ஆரம்பம் தான் என்ன? "என்ன பாட்டி.. இத்தனை வருசமா இது மாதிரி புண் வந்ததில்லையே? எப்படி பாட்டி?"
"சாமி...எப்டியாவது சரி பண்ணி விட்ருங்க சாமி. எனக்கு புண்ணு வந்ததே தெரியலைய்யா. இல்லனா ஓடி வந்துருப்பேன்" அது சரி பாட்டி .. இத்தனை வருசம் இப்படி ஒரு புண்ணு வரலையே இப்ப எப்படி வந்தது?" என்று கேட்டேன்.

அதற்கு அவரை அழைத்து வந்த மகன் கூறுகிறார்.. "ரெண்டு வாரத்துக்கு முன்னாடி செருப்பு வாரு அந்து போச்சாம் சார். செருப்ப மாத்தாம மிச்சம் பண்றேன்னு வீட்டுக்கு வெளியே அப்பறம் கொல்லைக்கு செருப்பு போடாம போயிருக்கு.. எங்கயோ முள்ளு குத்திருச்சு. பாட்டிக்கு கால் மதபதப்பு மரமரப்பு இருக்குறதுனால.. முள்ளு குத்துனதும் தெரியல. புண்ணு வந்ததும் தெரியல. இப்ப புழு நெளியறதும் தெரியல" என்றார்.

அப்போது நான் "ஏம் பாட்டி.. செருப்பு போடாம வெளிய எங்கயும் போகாதீங்கன்னு உங்களுக்கு எழுதியே கொடுத்திருக்கேனே?" என்றேன். அதற்கு அவர். "ஆமாஞ்சாமி.. என்ன மன்னிச்சிருய்யா.. செருப்பு அந்து போச்சு.. அத்தோட முன்னாடி பழக்கவழக்கம் மாதிரியே செருப்பு இல்லாம நடந்துட்டேன்" என்றார்.

இதை கண்ட நான், பாட்டியின் அறியாமை என்பதா? அல்லது முன்கூட்டியே அறிவுறுத்தியும் சரியாக விழிப்புணர்வு பெறாமை என்பதா? கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயர்களுக்கு கால் புண்கள் எளிதில் ஆறுவதில்லை. இதற்குக் காரணம், கால் பகுதி ரத்த நாளங்கள் சுருக்கத்தை சந்தித்திருப்பதும், கூடவே அந்தப் பகுதியில் நரம்பு மண்டல அழற்சி ஏற்படுவதும் காரணமாகின்றன.

எனவே நான் என்னை சந்திக்க வரும் நீரிழிவு நோயர்களை கட்டாயம் செருப்பின்றி வெளியே நடக்க அனுமதிப்பதில்லை.. எதையும் வருமுன் காப்பதே நல்லது. இவையன்றி கால் பாத வளைவு சரியாக இல்லாமல் தட்டையான கால்கள் கொண்டவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்களுக்கென்று பிரத்யேக செருப்புகள் அணிந்தே தீர வேண்டும் .

கூடவே கால் பாதம் சார்ந்த எலும்பில் வலி ஏற்பட்டு இருப்பவர்களும் உண்டு. இவர்களுக்கு வீட்டுக்கு உள்ளேயே எம் சி ஆர் செப்பல் போட அறிவுறுத்தப்படுகிறது. இன்னும் செருப்பின்றி வெளியே நடப்பதால் கால் பாதம் வழியாக நுண் புழுக்கள் உள் சென்று குடலில் வாழும். குடலில் இருந்து கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். இதன் விளைவாக ரத்த சோகை நோய் குணமாக வழியே இராது.

இதன் காரணமாகத் தான் அரசு பள்ளி சிறார் சிறுமியருக்கு காலணிகள் வழங்கப்படுகின்றன. கூடவே வருடம் இருமுறை குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் செருப்பின்றி வெளியே பணி புரிபவர்கள்/ நடப்பவர்களுக்கு காலில் முள் தைத்து / ஆணி தைத்து அதனால் பல சிக்கல்கள் உண்டாகின்றன. எனவே சகோதர சகோதரிகள் தயவு கூர்ந்து செருப்பு உள்ளிட்ட காலணிகளை அணிந்து வெளியே நடப்பது பல பிரச்சனைகளைத் தடுக்கும். பல நோய்களில் இருந்து காக்கும் நடவடிக்கையாகும்." இவ்வாறு டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா வெளியிட்ட பதிவு வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+