அஜித்குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. முதலில் கார் சாவி வாங்கியது இவர்தான்
சிவகங்கை: திருப்புவனத்தில் நகை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் லாக் அப்பில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் புதிய திருப்பமாக நிகிதாவிடம் இருந்து முதலில் அஜித்குமார் தான் சாவியை வாங்கியதாக கூறப்பட்டு வந்த நிலையில், முதலில் கார் சாவியை வாங்கியது செக்யூரிட்டி முருகன் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை திருட்டுப் போனது தொடர்பாக, அக்கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்தை (வயது 28) விசாரணைக்காக திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து சென்றனர். அவரும் தனக்கு எதுவும் தெரியாது என்று காவல்துறையிடம் கூறியுள்ளார்.

உயிரிழந்த அஜித்குமார்
ஆனாலும், அவரிடம் தொடர்ந்து அடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அஜித்குமார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணையை மேற்கொள்ளப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் அஜித்குமார் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் உரிய நீதி கிடைப்பதற்காக சிபிஐ விசாரணைக்கும் மாற்றி உத்தரவிட்டார்.
விசாரணை அறிக்கை
சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஜித்குமார் சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சிபிஐ விசாரணை
ஜூலை 14 ஆம் தேதி விசாரணை தொடங்கிய நிலையில், அஜித்குமாரின் தாய், தம்பியை மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு இன்று இருவரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 7 பேர் கொண்ட 2 குழு இருவரையும் வாகனத்தில் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து சென்றது. 15 ஆவது நாள் விசாரணையை அஜித்குமார் வீட்டில் சிபிஐ தொடங்கியுள்ளது.
புதிய தகவல்
இந்நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக நிகிதாவிடம் இருந்து முதலில் அஜித்குமார் தான் சாவியை வாங்கியதாக கூறப்பட்டு வந்த நிலையில், முதலில் கார் சாவியை வாங்கியது செக்யூரிட்டி முருகன் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, கோயில் செக்யூரிட்டி முருகன் என்பவர் கூறியுள்ளதாவது: சம்பவ தினத்தன்று நிகிதா, அவருடைய அம்மா சிவகாமியுடன் கோயிலுக்கு காரில் வந்தார். அவர் கோவில் வாசலில் அம்மா சிவகாமியை வீல்சேரில் வைத்து நின்றிருந்தபோது, அஜித்குமார் என்னிடம் வந்து காரில் சாமி கும்பிட வந்திருக்காங்க. செலவுக்கு ஏதாவது கொடுப்பார்கள், அவர்களுக்கு சுவாமி கும்பிட கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க என்றார்.
நிகிதாவுக்கு உபசரிப்பு
பின்னர், நானே நிகிதாவுக்கு புளியோதரை, தண்ணீர் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தேன். அவர்களை உபசரித்த பிறகு, நிகிதா கார் சாவியை என்னிடம் தந்தார். அந்த சாவியை அஜித்குமாரிடம் கொடுத்து காரை பார்க் செய்ய சொன்னேன். ஆனால், அஜித் அந்த சாவியை யாரிடம் கொடுத்தார் என எனக்குத் தெரியாது. நிகிதாவை அன்று தான் முதல் முறை பார்த்தேன். அடிக்கடி இந்த கோயிலுக்கு வருபவர் இல்லை. அவர் திரும்பிச் செல்லும்போது நான் இங்கு இல்லை. நைட் டியூட்டி முடித்து பகல் 1 மணிக்குச் சென்றுவிட்டேன். அஜித்குமார் மிகவும் நல்ல பையன். களவாடும் பழக்கம் அவனுக்கு இல்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications