அஜித் குமாருக்கு கஞ்சா கொடுத்து போலீசார் அடித்தனர்.. நண்பர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!
சிவகங்கை: திருப்புவனத்தை சேர்ந்த அஜித் குமாருக்கு கஞ்சா கொடுத்து போலீசார் அடித்ததாக அவரின் நண்பர் மனோஜ் பாபு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். போலீசார் அடித்த போது அஜித் குமார் தண்ணீர் கேட்டு கதறியதாக கூறிய அவர், போலீசார் கொடுத்த தண்ணீரில் மிளகாய் பொடி கலந்திருந்ததாகவும் கூறி இருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் காவல்துறையினர் கொடூர தாக்குதலால் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழக அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

44 காயங்கள்
அஜித் குமாரின் பிரேதப் பரிசோதனையில் அவரின் உடலில் 44 காயங்கள் இருந்தது தெரிய வந்தது. அதேபோல் மாநிலமே தனது குடிமகனை கொலை செய்துவிட்டது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதேபோல் அஜித் குமாரை போலீசார் மரக்கட்டை மற்றும் பைப் வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித் குமார் நண்பர் பேட்டி
அதுமட்டுமல்லாமல் அஜித் குமார் விசாரிக்கப்பட்ட போது மிளகாய் பொடியை வாயில் போட்டு அடித்துள்ளனர். இந்த நிலையில் அஜித் குமாரின் நண்பர் மனோஜ் பாபு பல திடுக்கிடும் தகவல்களை கூறி இருக்கிறார். இதுதொடர்பாக மனோஜ் பாபு பேசுகையில், அஜித் குமார் கொலை செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன். போலீசார் அடித்து துன்புறுத்தியதை நேரடியாக பார்த்தேன்.
என்ன நடந்தது?
3 போலீசார் அஜித் குமாரை அடித்தார்கள். அடிக்கும் போது பலமுறை அஜித் குமார் தண்ணீர் கேட்டார். ஆனால் தண்ணீர் கொடுக்கவில்லை. நாங்களும் அடிக்காதீர்கள், தண்ணீர் கொடுங்கள் என்று தெரிவித்தோம். ஆனால் போலீசார் கொடுக்கவில்லை. அஜித் குமார் எனக்கு தம்பி முறை.. அதனால் அவருடன் இருந்தேன். அவர் அருகில் இருந்து தான் பார்த்தேன். என்ன நடந்தது என்று அஜித் குமாரிடம் கேட்டேன்.
கஞ்சா கொடுத்த போலீசார்
போலீசார் என்னிடம் நீங்கள் கேளுங்கள்.. ஏதாவது உண்மையை சொல்கிறாரா என்று கேளுங்கள் என்றனர். அப்போது என்னிடம் அஜித் குமார், அடி தாங்க முடியவில்லை என்று மட்டும் சொன்னார். அப்போது அஜித் குமார் பக்கத்தில் சென்ற போது, அவர் மீது கஞ்சா வாசனை வந்தது. கஞ்சா அடிக்க வைத்து போலீசார் அடித்திருக்கிறார்கள். கஞ்சா கொடுத்துதான் டார்ச்சர் செய்துள்ளார்கள்.
தண்ணீரில் மிளகாய் பொடி
என்னுடைய ட்ரீட்மெண்ட் வேறு மாதிரி இருக்கும் என்று ஒரு போலீசார் கூறி, கஞ்சாவை கொண்டு வாருங்கள் என்று சொன்னதை என் காதால் கேட்டேன். பின்னர் தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து போலீசார் கொடுத்தனர். அந்த எரிச்சல் தாங்க முடியாமல் கதறினார். அஜித் குமாருக்கு கஞ்சா பழக்கமே கிடையாது.
காவல் நிலையத்திலேயே அஜித் குமார் மரணம்
மதியம் 3.30 மணியளவில் இருந்து மாலை 6 மணி வரை அடித்தார்கள். போலீசார் அஜித் குமாரை ஆட்டோவில் ஏற்றிய போதே, உயிர் இல்லை. அஜித் குமாரை அடிக்கும் போது நான் உடனிருந்தேன். அஜித் குமாரின் உயிரைக் காப்பாற்ற முதலுதவி அளிக்க முயற்சித்தேன். ஆனால் சில நொடிகளில் நாடி துடிப்பு நின்றுவிட்டது என்று தெரிவித்துள்ளார். மனோஜ் பாபுவின் கொடுத்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications