சிவகங்கை சீமை திமுகவில் பனிப்போர்! மாஜி அமைச்சர் Vs இந்நாள் அமைச்சர்! நீடிக்கும் ஈகோ யுத்தம்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட திமுகவில் அமைச்சர் பெரியகருப்பனுக்கும் மாஜி அமைச்சர் தமிழரசிக்கும் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாஜி அமைச்சரான தமிழரசி இப்போது மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
இதனால் சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் அரசு விழா உட்பட கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்தப் பனிப்போர் பஞ்சாயத்து பலமாக உள்ளது.
அந்த வார்டுகள் தான் வேண்டும்! காங்கிரஸ் பிடிவாதம்! விட்டுத் தராத திமுக! சிவகங்கை கூட்டணி கலாட்டா!
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராகவும், அமைச்சராகவும் இருப்பவர் கே.ஆர்.பெரியகருப்பன். இந்த மாவட்டத்திற்குட்பட்ட மானாமதுரை தனி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தமிழரசி. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் பனிப்போரால் அரசு அலுவலர்கள் யார் பேச்சைக் கேட்பது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே திமுக சீனியர்கள் சிலரிடம் அமைச்சர் தரப்பு தன்னை நடத்தும் விதம் பற்றி கூறி வேதனைத் தெரிவித்திருக்கிறார் தமிழரசி.
ஈகோ பிரச்சனை
இதனிடையே ஏறத்தாழ எல்லா மாவட்டங்களிலும் நிர்வாகிகள் மத்தியில் இதே ஈகோ பிரச்சனை இருப்பதால், சிவகங்கை விவகாரத்தை மிக சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை திமுக தலைமை. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு மாவட்டத்தில் பெரியளவில் அரசியல் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், இப்போது பொறுப்பு அமைச்சராக நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
பனிப்போர்
இதனால் தற்போதைய சூழலில் அமைச்சர் பெரியகருப்பனுக்கும் தமிழரசிக்கும் இடையே தான் பனிப்போர் நிலவி வருகிறது. விரைவில் நடைபெற இருக்கக் கூடிய தமிழக அமைச்சரவை மாற்றத்தில் தனக்கு ஒரு இடம் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார் தமிழரசி. இதற்காக அவர் காய் நகர்த்தி வருகிறார். இந்த விஷயத்தை அறிந்த பெரியகருப்பன் சும்மா இருப்பாரா என்ன, அவரும் தன் பங்குக்கு அரசியல் ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறார்.
அரசு அலுவலர்கள்
மானாமதுரை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரான தமிழரசியின் பேச்சைக் கேட்பதை காட்டிலும் மாவட்ட அமைச்சரான கே.ஆர்.பெரியகருப்பனின் பேச்சு தான் அரசு அலுவலர்கள் மத்தியில் எடுபடுகிறதாம். இதனால் ஏக அப்செட்டில் இருந்து வரும் தமிழரசி இது குறித்த தனது வருத்தத்தை தலைமைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளாராம்.