2 பேரும் கருப்பு.. குழந்தை மட்டும் எப்படி சிவப்பு.. அடித்தே கொன்ற தம்பதி.. ஆடிப்போன சிவகங்கை
சிவகங்கை: நானும் கருப்பு, நீயும் கருப்பு ஆனால் குழந்தை மட்டும் எப்படி பப்பாளி கலரில் செக்கச்செவேலென்று பிறந்துள்ளான் என்ற சந்தேகத்தில் வந்த பிரச்சினையில் 4 மாத குழந்தையை கணவன் மனைவி இருவரும் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கோவையில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்த போது மஞ்சுளா என்ற பெண்ணோடு காதல் ஏற்பட்டுள்ளது. மஞ்சுளா கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் காதலித்துக்கொண்டு இருந்த போது மஞ்சுளா கர்ப்பமடைந்துள்ளார்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மஞ்சுளாவுக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், திடீரென கணவன் சந்திரசேகருக்கு தன் குழந்தை சிவப்பாக இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. நாம் இருவரும் கருப்பாக இருக்கையில் குழந்தை மட்டும் எப்படி சிவப்பாக இருக்கிறான் என்று மனைவி மஞ்சுளாவிடம் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் 4 மாத குழந்தையை மஞ்சுளா தரையில் தூக்கிப்போட்டு அடித்துள்ளார். இதேபோல் கணவர் சந்திரசேகரும் குழந்தையை கீழே தூக்கிப்போட்டு அடித்துள்ளார். பெற்ற மகன் என்றும், பிஞ்சு குழந்தை என்று பாராமல் அடித்துள்ளனர். இதில் அந்த குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து யாருக்கும் தெரியாமல் குழந்தையை சந்திரசேகரும், அவரது தாயும் சேர்ந்து புதைத்துவிட்டனர்.
முன்னதாக மஞ்சுளா வீட்டை விட்டு சென்றதோடு தலைமறைவாகினார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தெரிந்தது. இதையடுத்து சந்திரசேகரை பிடித்து போலீசார் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அப்போது சந்திரசேகர் போலீசிடம் கூறியதாவது:-
மஞ்சுளாவிற்கு தென்காசியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், அவருடன் தான் மஞ்சுளா ஓடி விட்டதாகவும் கூறினார். இதையடுத்து தென்காசி சென்று மஞ்சுளாவை போலீசார் கைது செய்தனர். அப்போது மஞ்சுளாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும், அவரது உண்மையான பெயர் ஷாலினி என்றும் தெரியவந்துள்ளது.
ஷாலினிக்கு முதலில் நாகர்கோவிலை சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த கணவரை அப்படியே விட்டு விட்டுதான் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது தான் பேக்கரியில் வேலை பார்த்த சந்திரசேகருடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவரிடம் தான் நர்ஸாக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தான் சந்திரசேகருக்கும் மஞ்சுளாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து தான் 3வதாக தென்காசியை சேர்ந்த நபருடன் மஞ்சுளாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. தென்காசியை சேர்ந்தவருடனும் அவர் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் தான் குழந்தையும் சிவப்பாக பிறந்ததால், சந்தேகமடைந்து மஞ்சுளாவிடம் கேட்டுள்ளார் சந்திரசேகர். இதை தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் தான் குழந்தை கொல்லப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications