பிபி மாத்திரை சாப்பிட சொன்ன மருத்துவரை கடவுளானு கேட்ட முதியவர்! அவர் பாணியிலேயே மடக்கிய பரூக்
சிவகங்கை: உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரையே எடுக்காமல் வந்த 60 வயது முதியவரிடம் அவரது வழியிலேயே சென்று புரிய வைத்துள்ளார் சிவகங்கை அரசு மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில் கிளினிக்கில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் 3 நாட்களாக தலைசுற்றல் வாந்தி என்று என்னை சந்திக்க வந்தார். ரத்த அழுத்தம் பரிசோதிக்கப் பட்டது. 190/ 120 mm Hg இதை மிதமிஞ்சிய ரத்த அழுத்தம் என்று சொல்வோம்.
அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்த நோயை நான் ஆறு மாதங்கள் முன்பு கண்டு கூறியுள்ளேன். ஆனால் அவர் சரியாக மாத்திரை எடுக்கவில்லை. அவர் எப்போது வந்தாலும் தர்க்கம் செய்வதில் வல்லவர். இந்த முறை நான் தயாராகவே இருந்தேன். இப்போது நான் கூறினேன்.

பிபி அதிகம்
" அய்யா உங்களுக்கு பிபி ரொம்ப அதிகமா இருக்கு . நீங்க மாத்திரை சாப்படுங்கய்யா . இதயம் , சிறுநீரகம் எல்லாத்துலயும் பாதிப்பு வரும்கய்யா. இனிமேலாச்சும் மாத்திரை சரியா சாப்டுங்க" என்றேன். அவர் சொன்னார் " எனக்கு இப்ப மட்டும் தலை சுத்தாம பண்ணுங்க. நான் மாத்திரை தொடர்ந்துலாம் சாப்ட மாட்டேன் தம்பி. எனக்கு மாத்திரை ஆகாது " என்றார்.

அதிக பிரஷர்
" அய்யா . இந்த அளவு அதிகமான பிரஷர் உங்க இதயத்துல பாதிப்ப ஏற்படுத்தும். பக்கவாதம் வரலாம் . தயவு செஞ்சு நீங்க மாத்திரை எடுங்க அதான் உங்க உடம்புக்கு நல்லது" " நீங்க என்ன படைச்ச கடவுளா சார்? மாத்திரை எடுக்கலனா எனக்கு இதயத்துல ப்ராப்ளம் வரும்னு உங்களுக்கு எப்டி தெரியும். சொல்லுங்க"

ரோட்ல போகும் போது
" அய்யா நீங்க ரோட்ல நடந்து போறீங்க . எதுத்தாப்ல ஒருத்தர் டூ வீலர்ல போறாரு. சைட் ஸ்டாண்ட் போட்ட படியே போறாரு . நீங்க என்னங்கய்யா பண்ணுவீங்க??" " சைட் ஸ்டாண்ட எடுக்க சொல்லுவேன்" " ஏங்கய்யா . அவன் அப்டியே போட்டும்னு விட வேண்டியது தான ??" "அவன் எங்கயாச்சும் ஸ்டாண்ட் தடுக்கி விழுந்துட்டான்னா உசுறு போய்டுமே??" " அவன் கண்டிப்பா கீழ விழுந்துடுவான். அவன் உசுறு போய்டும்னு சொல்ல நீங்க என்ன கடவுளா"

விஷயம் தப்பா இருக்கு
" ஒரு விசயம் தப்பா இருக்குறத பாக்றீங்க . அவனுக்கு ஏதோ தப்பா நடந்துடுமோனு பயப்பட்றீங்க . எச்சரிக்கை பண்றீங்க. நானும் அதத்தான் செஞ்சேன். மாத்திரை போட்றதும் போடாததும் உங்க விருப்பம் அய்யா" இதைத்தான் ஆங்கிலத்தில் Empathy என்பார்கள்
அடுத்தவருடைய இடத்தில் தன்னை வைத்து பார்ப்பது அடுத்தவருக்கு நேர இருக்கும் ஒரு பிரச்சனையில் இருந்து அவரை எச்சரித்து தடுப்பது. இது அடிப்படையான மனித குணம் என டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications