இதுக்கே எடப்பாடி பயந்துட்டாரே.. எனக்கு லண்டனில் ஓட்டலா? டிடிவி தினகரன் அட்டாக்!
சிவகங்கை: அண்ணாமலை பட்டியல் வெளியிட்டதில் இருந்து எடப்பாடி பழனிசாமி பயத்தில் உள்ளார் என்றும் எனக்கு லண்டனில் ஓட்டல் இருந்தால் அரசிடமே ஒப்படைப்பேன் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் விமர்சித்து இருந்தார். இது குறித்து நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "டி.டி.வி தினகரனின் ஊழல் பட்டியலை முதலில் வெளியிட்டால் சரியாக இருக்கும். லண்டன் வரை சொத்து குவித்துள்ளார் என்று திமுக பல்வேறு செய்திகளை வெளியிட்டது. எனவே டிடிவி தினகரனுக்கு சொந்தமாக லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும்" என்றார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து எடப்பாடி பழனிசாமி, அண்னாமலை சொத்து பட்டியலை தான் வெளியிட்டு இருக்கிறார். அண்ணாமலை பேட்டி கொடுத்து தன்னை முன்னிலைப்படுத்தி பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார். அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்.
முதிர்ந்த அரசியல்வாதியை பற்றி கேள்வி கேளுங்கள். நான் பதில் அளிக்கிறேன். அதிமுக இன்று வலுவான கட்சியாக இருக்கிறது. இதை ஜீரணிக்க முடியாத ஓ பன்னீர் செல்வம் விரக்தியில் மாநாடு நடத்துவதாக கூறியிருக்கிறார்" என்று பேசியிருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-
அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் மடியில் கனம் இருக்கிற மாதிரி பயத்தில் உளறி வருகிறார். பதட்டத்தில் ஏதேதோ உளறி வருகிறார் லண்டனில் எனக்கு ஓட்டல் இருப்பதாகவும் கூறுகிறார். அப்படி எனக்கு ஓட்டல் எதுவும் இருந்தால் அதனை அரசாங்கத்திடம் ஒப்படைப்பேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அமமுக பணியாற்றுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், "அமமுக ஆரம்பித்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே இனி வரும் காலங்களிலும் அமமுக சுதந்திரமாக செயல்படும். ஒபிஎஸ் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பிறகு பார்க்கலாம். ஓபிஸ் திருச்சியில் நடத்தும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் கலந்து கொள்வது குறித்து பின்னர் பார்க்கலாம்"என்றார்.












Click it and Unblock the Notifications