தமிழகத்தை உலுக்கிய திருப்புவனம் வழக்கு: கைதான 5 போலீசாரும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 5 போலீஸ்காரர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட காவலர்கள் திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார் ( வயது 29). இவரை மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அதாவது, அந்த கோவிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர் தனது காரை பார்க்கிங் செய்ய காவலாளி அஜித் குமாரை அணுகியிருக்கிறார்.

அவர் மற்றும் இன்னொரு நபர் அந்த காரை பார்க்கிங் செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த காரில் இருந்த 10 சவரன் தங்க நகை காணாமல் போனதாகவும், அது தொடர்பாக அஜித்குமாரிடம் விசாரிக்க கோரி மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீரென அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மற்றொரு சாத்தான்குளம் சம்பவம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தன. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 6 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. இதில் அவரது உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாக அறிக்கை வெளியானதாக தகவல் வெளியாகியது. அஜித்குமார் உடல் முழுவதும் பல்வேறு இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும், உட்புற உறுப்புகளிலும் பலவிதமான காயங்கள் காரணமாக, ரத்தக் கசிவு ஏற்பட்டு அவை அவரது மரணத்துக்கு காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகளாக இருந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
தொடர்ந்து இந்த தகவலின் அடிப்படையில் 5 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு 5 பேரையும் திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து வந்து கைரேகை உள்ளிட்டவை பதிவு செய்தனர். அங்கு அவர்களிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் ஆஜர் செய்தனர்.
அப்போது நீதிபதி வெங்கடேஷ் 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக போலீசார் வெளியிட்டமுதல் தகவல் அறிக்கையில், 'போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த முதல் தகவல் அறிக்கையில், அஜித் குமாரின் தம்பி நவீன் குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது அஜித் திருடியதை ஒப்புக்கொண்டதாகவும், திருடிய நகைகளை கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்துள்ளதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அங்கு சென்று போலீசார் தேடியபோது நகை கிடைக்கவில்லை என போலீசார் எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications