நாலே கால் ஆண்டுகள் ஆட்சி.. அதில் நான்காண்டு தூக்கம்.. கின்னஸ் சாதனை - ப.சிதம்பரம் விமர்சனம்
சிவகங்கை: தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் பழனிசாமி, 4 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்த காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், "தமிழகத்தில் இதுவரை மாறி, மாறி தான் கட்சிகள் ஆட்சியை பிடித்திருக்கின்றன. ஆனால், அதிமுக தான் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, பழனிசாமி என்ற ஒருவர் இருக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சி.வி.சண்முகத்தைக் கூட கேள்விப்பட்டுள்ளேன்.. ஆனால், அவரை எனக்கு தெரியாது.
அரசுக்கு அழகல்ல
திடீரென முதல்வரான எடப்பாடி பழனிசாமி, நாலே கால் ஆண்டுகள் ஆட்சியில் இருந்து, அதில் நான்கு ஆண்டுகள் நீண்ட உறக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது கடந்த 3 மாதங்களாக ஊர், ஊராகச் சுற்றி வருகிறார். இது அரசுக்கு அழகல்ல. மேலும் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 4 ஆண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்.
கண் துடைப்பு
அலாவுதீனின் அற்புத விளக்கைப் போன்று, தேய்த்த உடனே திட்டம் நிறைவேறிடுமா? இந்த கால்வாய் கட்ட 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிடும். ஒருவேளை ஏற்கனவே அடிக்கல்நாட்டி, இப்போது திட்டம் முடிந்து தொடங்கி வைத்தால் கூட பரவாயில்லை. இது எல்லாம் வெறும் கண் துடைப்பு.
கின்னஸ் சாதனை
கொரோனா லாக் டவுன் காலத்தில், 10 லட்சம் பேர் மீதான வழக்கை வாபஸ் பெற்றதாக வேடிக்கையான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். பத்து லட்சம் பேர் மீது வழக்கு போட்டதே ஒரு முட்டாள்தனம். இத்தனை பேர் மீது வழக்கு போட்டு, அதை வாபஸ் பெற்ற முதல்வர் என வேண்டுமானால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறலாம். ஆனால், வழக்கை வாபஸ் பெற்றதை சாதனையாகக் கூறுவது மோமாளித்தனம்.
பாழாகிடும்
அதிமுக கூட்டணியாக அழைத்து வருவது பாஜக என்ற பொல்லாத கட்சி. பாஜக இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது. சாதி, மத கலவரங்களை ஏற்படுத்தி, சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது. விவசாயிகளுக்கு எதிராகவும் அக்கட்சி செயல்படுகிறது. கனிமொழியை ஓர் அதிகாரி ஹிந்தி தெரியவில்லையா என ஆணவமாகக் கேட்கிறார். இந்த ஆணவம் பிரதமராக மோடி இருப்பதால் வருகிறது. ஆனால் சோனியா காந்தி, மன்மோகன் சிங் இருந்திருந்தால் வந்திருக்காது. தென்நாட்டு மண்ணில் பாஜ கட்சி அமைந்து விடக்கூடாது. இங்கும் வந்துவிட்டால் வடநாடு மாதிரி பாழாகிவிடும்" என்று பேசியுள்ளார்.