இது தான் தமிழகம்! 3 மதத்தினர் இணைந்து கட்டிய பள்ளிவாசல்! மத நல்லிணக்கத்திற்கு முன் மாதிரி கிராமம்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இந்து -கிறிஸ்துவர் -முஸ்லீம்கள் என மூன்று மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்து புதிய பள்ளிவாசல் ஒன்றை கட்டியிருக்கிறார்கள்.
இது தான் தமிழகம்.. இப்படித் தான் நாங்கள் என்பதை ஒற்றுமையுடன் நின்று செயல்பட்டு கவனம் ஈர்த்திருக்கிறார்கள் சிவகங்கை மாவட்டம் பணக்குடி கிராம மக்கள்.
பள்ளிவாசலுக்கான கட்டுமானச் செலவு ரூ.70 லட்சம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இறைவன் கொடுத்த அறிவுக்கு ஃபீஸ் எதுக்கு? ரூ.8 லட்சத்தை பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் கொடுத்த பொறியாளர்!
பணகுடி கிராமம்
சிவகங்கை மாவட்டம் பணக்குடி கிராமத்தில் கோயில், தேவாலயம், பள்ளிவாசல் ஆகிய மூன்று மத வழிபாட்டுத் தலங்களும் அருகருகே அமைந்திருக்கிறது. இன்று நேற்று என்றில்லாமல் காலம் காலமாக இப்படி அமைந்திருக்கும் அந்தக் கிராமத்தில், பள்ளிவாசல் பழமையானது என்பதால் அதன் கட்டிடம் சிதலமடைந்தது. இதையடுத்து அதைப் புதுபித்துக்கட்ட முடிவெடுத்த ஜமாத் நிர்வாகத்தினர் அதற்கான பணிகளை தொடங்கினர்.
வேற்றுமையில் ஒற்றுமை
கடந்த ஒரு வருடமாக நடைபெற்ற பள்ளிவாசல் கட்டுமானப் பணி ஒரு வழியாக நிறைவடைந்து நேற்று திறப்பு விழாவும் வைக்கப்பட்டது. இதில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என மூன்று மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக கலந்துகொண்டு எம்மதமும் சம்மதம் என்பதற்கேற்ப வேற்றுமையில் ஒற்றுமையை காட்டினர். இதுமட்டுமல்லாமல் பணகுடி முஹைதீன் ஆண்டவர் ஜும் ஆ பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு இந்து, கிறிஸ்துவர்களும் பொருளுதவி செய்திருக்கின்றனர்.
கந்தூரி விழா
பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதமாச்சரியங்களை கடந்து கந்தூரி சாப்பாடு வழங்கப்பட்டது. இதில் ஹைலைட் என்னவென்றால், பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு வந்த இந்துக்கள் பலர் சீர்வரிசையுடன் வந்திருந்தது தான். மதம் எதற்கு மனிதம் போதும் என்ற ஒற்றை கொள்கையை ஆழமாக பற்றிப் பிடித்திருக்கிறார்கள் சிவகங்கை மாவட்டம் பணக்குடி கிராம மக்கள்.
முன்மாதிரி கிராமம்
ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு மாநிலமும் பணக்குடி கிராமத்தையும் அந்த ஊர் மக்களின் ஒற்றுமையையும் முன்மாதிரியாக கொண்டால் பிரிவிணை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.