தமிழகத்தை உலுக்கிய கச்சநத்தம் மூவர் படுகொலை.. 27 குற்றவாளிக்கான தண்டனை அறிவிப்பு தேதி ஒத்திவைப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் 2018ல் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 27 பேரின் தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தண்டனை தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே கச்சநத்தம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே ஆவாரங்காடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2018 மே மாதம் 28 ம் தேதி கச்சநத்தம் கிராமத்தில் திருவிழா நடந்தது. அப்போது இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.
கச்சநத்தம் கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் ஒருகும்பல் புகுந்து வெட்டியது. இதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகியோர் இறந்தனர். இந்த மூவர் படுகொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுதொடர்பாக பழையனூர் போலீசார் வழக்குப்பதிந்து 33 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்தது. குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்தன. இதையடுத்து ஆகஸ்ட் ஒன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த 27 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு தண்டனை விபரங்கள் இனு்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
தமிழகத்தை உலுக்கிய கச்சநத்தம் 3 பேர் படுகொலை- குற்றவாளிகள் 27 பேருக்கான தண்டனை நாளை அறிவிப்பு!
இதனால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 27 பேருக்கும் வழக்கு தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான தண்டனை விபரங்கள் ஆகஸ்ட் 5ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.