விஜய்க்கு ஓட்டு போடனும்.. முதியவர் சொல்லியும் காங்கிரஸ்க்கு குத்திய அதிகாரிகள்? காரைக்குடியில் மறியல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான டாக்டர் டிகே பிரபுவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறிய முதியவரின் தபால் ஓட்டை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடிக்கு அதிகாரிகள் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தவெக வேட்பாளர் டிகே பிரபு மற்றும் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ்கட்சியின் எஸ் மாங்குடி உள்ளார். இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்போகி பாண்டிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்கி உள்ளார். அதேபோல் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல் மருத்துவரான டிகே பிரபு போட்டியிடுகிறார்.
தபால் ஓட்டு
சீமான் களம் இறங்கி உள்ளதால் காரைக்குடி சட்டசபை தொகுதி அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு மூலம் வாக்களிப்பது நேற்று தொடங்கியது. காரைக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட காலவாய்பொட்டல் கிராமத்தில் உள்ள தோழர் ஜீவானந்தம் தெருவில் ராஜாமணி மற்றும் சீதையம்மாள் என்ற முதிய தம்பதி வசித்த வருகின்றனர். இவர்கள் தபால் ஓட்டு இன்று பதிவு செய்தனர்.
தவெகவிற்கு பதில் காங்கிரஸ்க்கு..
அதிகாரிகள் அவர்களின் வீட்டுக்கு சென்றபோது ராஜாமணி தவெக வேட்பாளர் டிகே பிரபுவிற்கு ஓட்டு போட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் ராஜாமணியின் ஓட்டை தவெகவிற்கு பதில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ராஜாமணியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்தனர்.
தவெக வேட்பாளர் சாலை மறியல்
இதுபற்றி அறிந்த தவெக வேட்பாளர் டிகே பிரபு உடனடியாக தேர்தல் அதிகாரியான சார் ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்றனர். அங்கு சார் ஆட்சியர் இல்லை. இதனால் அவர்கள் புகாரை கொடுத்துவிட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து வீடியோவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதிகாரிகள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் தேவக்கோட்டை ராம் நகரில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications