சி.வி.சண்முகம் காட்டுமிராண்டித்தனமாக பேசினார்.. அமைச்சர் பெரியகருப்பன் ஆவேசம்
சிவகங்கை: அதிமுக பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் காட்டுமிராண்டியை போல் பேசியதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார்.
மேலும், அதிமுகவில் நடக்கும் கோஷ்டி மோதலுக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையிலும் திமுக அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது எனக் கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் அதிமுகவுக்கு தமிழகத்தை பற்றியோ மக்களை பற்றியோ எந்த கவலையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பிறந்தநாள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கொன்னக்குளத்தில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை காட்டுமிராண்டி என விமர்சித்தார். எங்கு பேசுகிறோம் யார் முன்னிலையில் பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் வீதியில் பேசுவதை போல் ஒரு கட்சியின் பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் பேசுகிறார் என்றால் அது எப்படிப்பட்ட இயக்கமாக இருக்கும் என பெரியகருப்பன் தெரிவித்தார்.

நாலாந்தர பேச்சு
சி.வி.சண்முகத்தை பொறுத்தவரை நாலாந்தரமாக நடந்துகொள்ளக் கூடியவர் என்றும் அதிமுகவினரின் எண்ணம் எல்லாம் மீண்டும் எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்பது மட்டுமே என அமைச்சர் பெரியக்ருப்பன் விமர்சித்தார். அதிமுகவில் நடக்கும் கோஷ்டி மோதலுக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லாத போதும் திமுக அரசு ஒரு தலைபட்சமாக நடந்துகொள்வதாக கூறி தேவையின்றி வம்புக்கு இழுக்க வேண்டாம் என அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

என்ன தொடர்பு
சிவகங்கையில் கூட்டம் நடத்தக் கூடிய ஒருவர் விழுப்புரத்தில் இருக்கக் கூடியவரை பற்றி பேசுவதற்கு என்ன அவசியம் வந்தது என விசாரித்தால், அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் சீண்டும் வகையில் சி.வி.சண்முகம் பேசியதே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் சி.வி.சண்முகத்தை ஊரெங்கும் மேடை போட்டு வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளார்கள் திமுகவினர்.

ஆட்சிக்கு வர முடியாது
தமிழகத்தில் இனி அதிமுக ஆட்சிக்கு வர முடியாது என்று கூறிய அவர், திமுக அரசின் ஓராண்டுக் கால சாதனைகளை விவரித்து பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications