கார்த்தி சென்னையில்.. நான் சிவகங்கையில்.. நலமாக இருக்கிறோம்.. ப சிதம்பரம் தகவல்
சிவகங்கை: கொரோனா உறுதியான கார்த்தி சிதம்பரம் சென்னையில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் நான் சிவகங்கையில் மானகிரியில் உள்ள இல்லத்தில் நலமாக இருக்கிறேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்தை தாண்டியது. நாள்தோறும் கொரோனாவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை.
உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் மக்கள் பணி செய்யும் ஆட்சியர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைவரிடத்திலும் தொற்றிதான் வருகிறது. இந்த நிலையில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதியானது.

எனினும் அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்களும் ப சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் வேதனை அடைந்தனர்.
ப சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து அறிவதற்காக அவரை தொலைபேசி, மெயில், ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து கார்த்தியின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தனது ட்விட்டரில் நலம்விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கார்த்தி சிதம்பரம் MP கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார். நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி என தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications