தமிழகத்தில் ஜிகா வைரஸ் அச்சம் தேவையில்லை.. கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்.. அமைச்சர் மா.சு
சிவகங்கை: கேரளாவில் மொத்தம் 14 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று தொடர்ந்து 50ஆவது நாளாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில், சிவகங்கை அருகே உள்ள பூவந்தி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 137 படுக்கைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டையும் அவர் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் மொத்தம் 10,839 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாகவே இவை எதுவும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதையடுத்து15ஆவது நிதிக் குழு மானிய நிதி ரூ.4,619 கோடி மூலம் இங்குள்ள சுகாதார நிலையங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளோம்,
புதிய திட்டம்
நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்காக மாநிலம் முழுவதும் 20 லட்சம் பேர் மட்டுமே மருந்து வாங்குகின்றனர். ஆனால், உண்மையில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்ப் பாதிப்பு உள்ளது. அவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
ஜிகா வைரஸ்
ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிக்குப் பிரசவம் முடிந்து, தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்த ஜிகா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதேநேரம் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் உருமாறும் கொரோனா குறித்தும் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் தொடர் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீவிர கண்காணிப்பு
கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை கவனத்தில் கொண்டிருக்கிறோம். இதனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களை முறையான கண்காணிப்பிற்குப் பின்னரே மாநிலத்திற்குள் அனுமதிக்கிறோம். மேலும், அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைப் பிரமாண்டமாக விரிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அவர் கூறுகிறார்.