திமுகவை வீழ்த்த உயிரை கொடுக்கவும் தயார் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
திமுகவை வீழ்த்த என் தொண்டை மட்டுமல்ல என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
சிவகங்கை: திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரைக் கொடுக்கவும் தயார் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். பல பொதுக்கூட்டங்களில் பேசி வருவதால் எனது தொண்டை சரியில்லை. திமுகவை வீழ்த்த என் தொண்டை மட்டுமல்ல என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
தமிழகம், புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அதிமுக கூட்டணி பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முதல்வர் பழனிச்சாமி பிரசாரம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரம் சில நேரங்களில் எதிர்கட்சியான திமுகவை கேலி கிண்டல் செய்யும் வகையில் உள்ளது. சில நேரங்களில் எதிர்கட்சியினருக்கு எதிராக ஆவேசமான கருத்துகளை முன் வைத்து பிரசாரம் செய்கிறார். அவரது தொண்டை கட்டிக்கொண்டாலும் பிரசாரத்தை தொடர்ந்து வருகிறார். இன்றைய தினம் காலையிலேயே பிரசாரத்தை ஆரம்பித்த முதல்வர் திருப்பத்தூர் தொகுதியில் மருது அழகுராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

நலத்திட்டங்கள் ஏராளம்
திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி. திமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது கிடையாது. அதனால்தான் சாதனையை சொல்வது இல்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி கொடுத்துள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் திட்டங்களை கொண்டு வர முடியும் என்றார்.
திமுக நாட்டு மக்களை பார்க்கவில்லை. குடும்பத்தை மட்டும்தான் பார்க்கிறது. இந்த தேர்தல் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். மத்தியிலும், மாநிலத்திலும் வாரிசு அரசியல் வரக்கூடாது என்றார். 2 ஆண்டுக்கு முன்பு ஸ்டாலின் எங்களுடைய குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வருவது கிடையாது என்றார். தற்போது உதயநிதியை வேட்பாளராக அறிவித்துள்ளார். திமுகவில் 20 பேர் வாரிசு வேட்பாளர்கள். அதிமுக மக்களுக்கான கட்சி என்று கூறினார்.

ஆட்சியில் அமர்த்துவதே லட்சியம்
சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், உயிரைக் கொடுத்தாவது அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். அதிமுகவை
மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே தனது லட்சியம் என்றும் கூறினார்.

உயிரைக்கொடுக்கவும் தயார்
எந்த நேரத்திலும் ஸ்டாலின் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கிறார். திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரைக் கொடுக்கவும் தயார் என்று ஆவேசமாக கூறினார். பல பொதுக்கூட்டங்களில் பேசி வருவதால் எனது தொண்டை சரியில்லை.திமுகவை வீழ்த்த என் தொண்டை மட்டுமல்ல என் உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications