சென்னையில் 5 வயது சிறுமியின் மண்டையை பெயர்த்த ராட்வைலர் நாய்கள்! இப்போ எங்கே இருக்கு தெரியுமா?
சிவகங்கை: சென்னையில் 5 வயது சிறுமியை கடித்து குதறிய ராட்வைலர் நாய்களை அதன் உரிமையாளர் புகழேந்தி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்துள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக உள்ளவர் ரகு. இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு சுதிக்ஷா என்ற 5 வயது மகள் உள்ளார்.

இந்த நிலையில் மே 5 ஆம் தேதி இரவு அந்த சிறுமியை ராட்வைலர் நாய்கள் கடித்து குதறின. இதில் சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு தாய் சோனியா ஓடி வந்து குழந்தை நாய்களிடம் இருந்து மீட்க முயற்சித்தார். ஆனால் அவரையும் கடித்தது.
அப்போது அருகே இருந்த மதன் என்ற இளைஞர் அந்த சிறுமியின் கால்களை பிடித்து இழுத்து வெளியே தூக்கிக் கொண்டு ஓடினார். இதையடுத்து சிறுமியை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்குமாறும் அதற்கு என்ன செலவானாலும் தான் பார்த்துக் கொள்வதாகவும் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறியதன் பேரில் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன் முறையாக பராமரிக்கப்படவில்லை. 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி இந்த நாய்களை பறிமுதல் செய்யும். நாயின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகழேந்தி, ஆண், பெண் என இரு நாய்களை வளர்த்து வருகிறார். அவை ராட்வைலர் இனத்தை சேர்ந்தவை. மிகவும் ஆக்ரோஷமான நாய்கள் என அறியப்படுகின்றன. இந்த நாய்களுக்கு ஒரு குட்டியும் வீட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாய்களின் குட்டியை விற்பனையும் செய்துவருகிறாராம். புகழேந்தி எங்கு சென்றாலும் அந்த நாய்களை கடிவாளம் இல்லாமல் சர்வ சாதாரணமாக உலவ விடுவார் என அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி நோட்டீஸை அடுத்து அந்த இரு நாய்களையும் மதுரை மாவட்டத்தில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு கொண்டு சென்றார் புகழேந்தி. இதையடுத்து தற்போது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புகழேந்தியின் பண்ணை வீடு இருக்கிறதாம். அங்கு அவ்வப்போது திருட்டுச் சம்பவங்கள் ஏற்படுவதால் அந்த இரு நாய்களுடன் புகழேந்தியும் அவருடைய மனைவியும் அங்கு சென்றுவிட்டனர்.
அங்கு வேலியிடப்பட்ட அந்த பண்ணை வீட்டில் நாய்களை சிறிது நேரம் கட்டி போட்டும் சுதந்திரமாக திரியவிட்டும் வருகிறார்கள். நாய்கள் வெளியே போக வாய்ப்பில்லை. எனினும் சென்னையில் 5 வயது சிறுமியின் பின் மண்டையை முடியுடன் பெயர்த்த காரணத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications