Seeman: வாக்கு சதவிகிதம் முக்கியம் அல்ல.. சீமான் சட்டசபை போகணும்.. இலக்கை மாற்றிய நாம் தமிழர்!
சிவகங்கை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடைசி 4 நாட்கள் காரைக்குடி தொகுதியில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நாதகவின் வாக்கு சதவிகிதத்தை நிரூபிப்பதை விடவும், சீமானை இம்முறை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்று நாதகவினர் தங்களின் இலக்கை நிர்ணயித்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நாதகவின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த முறை நாதகவுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. சீமான் எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம் கூடியதால், நாதகவினர் உற்சாகம் அடைந்தனர்.

அதேபோல் திருச்சியிலும் நாதகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியிலும் ஒரு குழு கிராமந்தோறும் சென்று பணியாற்றி வருகிறது. இருந்தாலும் காரைக்குடி தொகுதி களம் யார் வெல்வார்கள் என்று கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி, அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் கடுமையான சவால் அளிக்கின்றனர்.
இதனால் சீமானின் பிரச்சாரத் திட்டத்தில் நாதக ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இத்தனை நாட்களாக நாதக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்று பேசி வந்த சீமான், இனி திமுக, அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சிக்க இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் காரைக்குடி தொகுதியில் மட்டும் கடைசி 4 நாட்கள் பிரச்சாரம் செய்ய சீமான் தரப்பு திட்டமிட்டிருக்கிறது. அதேபோல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான குழுக்களை களமிறக்கி வீடு தோறும் சீமானுக்காக வாக்கு சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காரைக்குடியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
இந்த முறை விஜய் வருகையால் நாதகவின் வாக்கு சதவிகிதம் குறையும் என்பதை அக்கட்சியினர் அறிந்தே இருக்கின்றனர். ஆனால் இந்த தேர்தலில் நாதகவின் இலக்கு மாற்றம் அடைந்துள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை நாதகவின் வாக்கு சதவிகிதத்தை உயர்த்துவதை விடவும், சீமானை சட்டமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அக்கட்சியினரின் இலக்காக இருக்கிறது.












Click it and Unblock the Notifications