தடுப்பூசி போட்டுகங்கம்மா... உங்க மனுவை அவரிடம் கொடுக்கிறேன்... சிவகங்கையில் ஸ்ரீநிதி கார்த்தி..!
சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருவது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக தொகுதியில் முகாமிட்டுள்ள ஸ்ரீநிதிகார்த்தி சிதம்பரம், கிராமம் கிராமமாக பயணித்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
ஒரு சில இடங்களில் பெண்களை சந்திக்கும் போது, தடுப்பூசி போட்டுகங்கம்மா அது தான் நம்மை கொரோனாவிலிருந்து தற்காக்கும் என விழுப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

மருத்துவர்
மருத்துவர், பரதநாட்டிய கலைஞர், அரசியல் ஆர்வலர், என்ற பன்முக திறமை கொண்டவர் ஸ்ரீநிதி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளும், கார்த்தி சிதம்பரத்தின் மனைவியும் ஆவார். அரசியல் ஆர்வலராக இருந்தாலும் கூட இதுவரை வெளிப்படையாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்து வந்த இவர், இப்போது தனது கணவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சிவகங்கையில் களமிறங்கியுள்ளார்.

3 நாட்கள்
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அரிமளம், கொத்தமங்கலம், சாக்கோட்டை, என பல ஒன்றியங்களுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு கடந்த 3 நாட்களாக பயணித்து வருகிறார். ஸ்ரீநிதி சிதம்பரத்தை வாஞ்சையுடன் வரவேற்று சந்திக்கும் பெண்களிடம், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியத்தை ஊரில் ஒருவராக இருந்து எடுத்துரைக்கிறார்.

நிதி இல்லை
ஒரு சில ஊராட்சிகளில் தங்கள் தேவைகள் குறித்து மக்கள் முறையிட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை மத்திய அரசு கொடுத்தபிறகு உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்தார். மேலும், இதனிடையே குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை குறிப்பெடுத்து வைத்துக்கொண்ட அவர், இதனை தனது கணவர் கார்த்தி சிதம்பரத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று சொந்த நிதியில் கூட செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.

வரவேற்பு
ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதி டூர் உள்ளூர் காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மக்கள் மத்தியில் ஸ்ரீநிதிக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்துகொண்ட அவர்கள், இது நேரடி அரசியல் வருகைக்கான முன்னோட்டமா என அவர்களுக்குள் முணுமுணுக்கின்றனர். இதனிடையே இதேபோன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை இனி மாதம் ஒரு முறை நடத்த திட்டமிட்டுள்ளார் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம்.












Click it and Unblock the Notifications