சிவகங்கையில் எருமை, ஆடுகளை பலியிட்டு.. தரையில் சிந்தவிடாமல் ரத்தம் குடித்து நூதன திருவிழா
சிவகங்கை: சிவகங்கையில் உள்ள பையூர் பழமலை நகரில் காளி கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் எருமைகளை பலியிட்டு ரத்தம் குடித்து வழிபடும் நூதன திருவிழா இன்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் காளிக்கு எருமையையும் பிற தெய்வங்களை வழிபடுபவர்கள் ஆடுகளையும் பலியிட்டனர். இந்த நிகழ்வில் 17 எருமை மாடுகளும், 92 ஆடுகளும் பலியிடப்பட்டன. இதில் 100க்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டார்கள்.
சிவகங்கையில் உள்ள பையூர் பழமலைநகரில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் நடத்தும் கோவில் திருவிழா வித்தியாசமானது. எருமைகளை பலியிட்டு ரத்தம் குடித்து வழிபடும் நூதன திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்துவார்கள்.

அந்த வகையில் திருவிழா கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22ம் தேதி) அன்று பெருமாள்சாமி பூஜையுடன் தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் விரதம் இருந்தனர்.
விழா தொடங்கிய 3வது நாளான இன்று திருவிழாவில் முக்கிய நிகழ்வாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்ததை குடிக்கும் நிகழ்வு தொடங்கியது. இன்று அதிகாலை நடந்த விழாவில், காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் எருமை மாடு தலையசைத்து சம்மதம் தெரிவிக்கும் வரை காத்திருந்தனர். அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் பலியிடப்படுகின்றன. எருமை பலியிடும்போது வெளியேறும் ரத்தத்தை பக்தர்கள் குடித்து வழிபட்டார்கள்.
காளிக்கு எருமையையும் பிற தெய்வங்களை வழிபடுபவர்கள் ஆடுகளையும் பலியிட்டார்கள். இந்த நிகழ்வில் 17 எருமை மாடுகளும், 92 ஆடுகளும் பலியிடப்பட்டிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் இந்த விழா குறித்து அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் குடில் அமைத்து அதில் வழிபாடு செய்து ஒரு எருமை மாட்டை பலியிடுகிறோம். அதன் மாமிசத்தை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் தற்போது எந்த ஊரில் வசிக்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்து அனுப்புகிறோம். இந்த விழா அனைவராலும் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் சில ஆண்டுகள் தொடர்ச்சியாகவும், பின்னர் சில ஆண்டுகள் இடைவெளி விட்டும் நடத்துகிறோம்.
காளி அசுரனை(எருமை) வதம் செய்யும்போது தரையில் சிந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்தெழும் என்று நம்புகிறோம். அதனால் அதை தரையில் சிந்தவிடாமல் குடித்து விடுகிறோம் என்று மக்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமையுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. இன்று நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.












Click it and Unblock the Notifications