சிவனை தேடி ஒரு ஆன்மீக பயணம்.. ஹரித்துவார் முதல் ராமேஸ்வரம் வரை! 2000 கிமீ நடந்தே செல்லும் உபி இளைஞர்
சிவகங்கை: ஆன்மீக விழிப்புணர்வை வலியுறுத்தி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹரித்துவார் முதல் ராமேஸ்வரம் வரை ஆன்மீக விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திர ஹவே.. 36 வயதான அவர் அங்கே சிறியதாகக் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிலைச் செய்து வருகிறார். இவருக்குச் சிறு வயதில் இருந்தே ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம்.

ஆன்மீக பயணம்: அங்குள்ள பெரும்பாலான கோயில்களில் இவர் தரிசனம் செய்துள்ளார். இதற்கிடையே மன அமைதி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை வலியுறுத்தி இவர் ஆன்மீக பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதுபோல அனைவரும் ஆன்மீக பயணம் போவார்கள் தானே என நீங்கள் கேட்கலாம்.
இவர் ஆன்மீக பயணத்தையே சற்று வித்தியமாகச் செய்கிறார். அதாவது ஹரித்துவாரில் இருந்து ராமேஸ்வரம் வரை நடைப்பயணமாகவே தனது ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் இந்த ஆன்மீக பயணத்தை இவர் தொடங்கியுள்ளார்.
ராமேஸ்வரம்: உத்தரப் பிரதேசத்தில் அவர் ஆன்மீக பயணத்தைத் தொடங்கிய இவர், மகாராஷ்டிரா, தெலுங்கானா வழியாக இப்போது தமிழ்நாடு வந்துள்ளார். இப்போது திருவண்ணாமலையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.. மொத்தம் 2000 கிமீ அவர் இப்படி ஆன்மீக பயணமாக நடந்தே செல்கிறார்.
நேற்றைய தினம் இவர் காரைக்குடி வழியாகச் சென்ற நிலையில், அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பலரும் அவரை வரவேற்றனர். மேலும், ஆன்மீக பயணம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் அவரது ஆன்மீக பயணம் குறித்துக் கேட்டறிந்தனர். தான் ஒரு சிவ பக்தர் என்றும் சிவனை தேடி இந்த பயணத்தை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழிபாடு: ஆன்மீகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மன அமைதிக்காகவும் இந்த நடைப்பயணத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். ராமேஸ்வரத்திற்குச் சென்று அங்கு முக்கிய கோயில்களில் வழிபாடு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும், இந்த நடைப்பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த கட்டமாக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய சிவாலயங்களுக்கும் நடைப்பயணமாகச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications