சிவகங்கை விஏஓவுக்கு பேராசை.. 25,000-க்கு ஆசைப்பட்டு எல்லாம் போச்சு.. பட்டா வாங்க போனவர் வைத்த ஆப்பு
சிவகங்கை: சிவகங்கை அருகே சிங்கம்புணரி பகுதியில் பட்டா மாறுதலுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார். தாலுகா அலுவலகத்தில் புகுந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற ஒரு பேச்சு மக்கள் மத்தியில் பரவலாக நிலவுவது உண்டு. தற்போது பெருமளவில் இந்த நிலமை மாறிவிட்டாலும், இன்னும் முழுமையாக லஞ்சம் லாவண்யங்களை தீர்க்க முடியவில்லை.

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள்
அதிலும் வருவாய் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சான்றிதழ் கேட்டு செல்லும் போது லஞ்சம் கேட்பதாகவும் பொதுமக்கள் அவ்வப்போது புகார் அளிப்பதை பார்க்க முடிகிறது. இப்படியான நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தால், அவர்களும் அதிரடி காட்டி, லஞ்சம் வாங்கும் ஊழியர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். துறை ரீதியாகவும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்கிறது.
இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் தற்போது லஞ்சம் வாங்குவது கணிசமாக குறைந்துவிட்டது என்று சொன்னாலும் கூட, இன்னும் முழுமையாக இந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை. தமிழகத்தில் தினமும் எங்காவது ஒரு இடத்தில் லஞ்சம் வாங்கி அதிகாரிகள் மாட்டிக்கொள்ளும் சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான ஒரு நிகழ்வுதான் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்துள்ளது.
பட்டா மாறுதலுக்கு லஞ்சம்
ரூ.25 ஆயிரம் லஞ்ச பணத்திற்கு ஆசைப்பட்டு தற்போது மொத்தமாய் அவமானப்பட்டு நிற்கிறார் விஏஓ ஒருவர். இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் (வயது 32). பிரான்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை தலையாரியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் பணிக்காலத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து பாலசுப்பிரமணியனுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி கிடைத்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்காக வந்துள்ளார்.
தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
அப்போது பாலசுப்பிரமணியன், பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்றால் லஞ்சமாக ரூ.25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். இவ்வளவு பணம் முதலில் என்னால் தர முடியாது என்று கூறியிருக்கிறார். பிறகு "சரி, கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். பின்னர், லஞ்சம் கொடுக்க விரும்பாத பாண்டித்துரை இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதன்பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ பாலசுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுக்க கோரி பாண்டித்துரையிடம் கொடுத்து அனுப்பினர். அதன்பேரில், நேற்று அந்த பணத்தை அவர் சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்தில் வைத்து பாலசுப்பிரமணியனிடம் கொடுத்தார்.
ரசாயனம் தடவிய பணத்தை அவர் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தாலுகா அலுவலகத்தில் வைத்தே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications