சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்.. 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்
Recommended Video
சிவகாசி: சிவகாசியில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள், இன்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பல கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இனிமேல், அதிக புகை மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளைதான், உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும், தீபாவளி நாளில் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதுகுறித்து இன்று பட்டாசு ஆலை உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் செயலாளர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிவகாசியில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படுகின்றன. இதனால் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் (நேரடியாகவும், மறைமுகமாகவும்) வேலை வாய்ப்பை இழப்பார்கள்.
உச்சநீதிமன்ற உத்தரவால், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. பட்டாசு தயாரிப்பில் பசுமை பட்டாசு என்ற ஒன்று கிடையாது. அதிலும் சிவகாசியின் தட்பவெட்ப நிலைக்கு இந்த விதிமுறை சரிப்பட்டு வராது.
டிசம்பர் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். உச்சநீதிமன்ற விதிமுறைகள் அடிப்படையில், சிவகாசியில் பட்டாசு தயாரிக்க முடியாது என்பதே யதார்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.