சும்மா சொல்லக் கூடாது.. வெறித்தனம் வெறித்தனம்... திமுகவை பாராட்டுறது யார்னு பார்த்தீங்களா?
சிவகாசி: திமுகவினர் வெற்றியை மனதில் வைத்து வெறித்தனமாக வேலை பார்த்தார்கள். அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது திமுகவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவை விட சற்று குறைந்த இடங்களைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளது அதிமுக. இதனால் அதிமுகவினர் சோர்வடைந்துள்ளனர்.
அதேசமயம், திமுகவினர் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். தங்களது உழைப்பு வீண் போகவில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சு அவர்களிடம் உள்ளது. இ்த நிலையில் அவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பாராட்டு போனஸாக வந்து சேர்ந்துள்ளது.

திமுக - அதிமுக மோதல்
சிவகாசியில் இன்று தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்தை ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர். அப்போது வழக்கம் போல எதார்த்தமாக பல விஷயங்களை மனம் விட்டுப் பேசினார் அமைச்சர். அப்போது அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக, திமுக இடையேதான் மோதலே இருந்தது.

திமுக வெறித்தனம்
எங்களைப் போலவே திமுகவினரும் வெற்றியை இலக்காக கொண்டு வெறித்தனமாக வேலை பார்த்தனர். அதை மறுக்க முடியாது. அதேசமயம், அதிமுகவினரிடம் நம்பிக்கை மட்டுமே இருந்தது. இதனால்தான் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு போய் விட்டது. அவர்களைப் போல நாங்களும் தீவிரமாக பணியாற்றியிருக்க வேண்டும்.

25 கட்சிகளுடன் கூட்டணி
இருப்பினும் 25 கட்சிகளை கூட்டணி சேர்த்துக் கொண்டு திமுக போட்டியிட்டது. இது கேவலமானது. தனித் தனியாக போட்டியிட வேண்டும். அதிமுக தனித்துதான் போட்டியிட்டது. இந்த இடங்களை வென்றுள்ளது.

இனி சுதாரிப்போம்
வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்தத் தவறுகளை சரி செய்து கொண்டு சிறப்பான வெற்றியைப் பெற நாங்கள் உழைப்போம். இதுதொடர்பாக முதல்வர், துணை முதல்வருடனும் ஆலோசனை நடத்துவோம் என்றார் ராஜேந்திர பாலாஜி.












Click it and Unblock the Notifications