40 வயதாகிவிடும் ரோகித்.. சொன்னால் கேளுங்க.. சுப்மன் கில் எழுச்சியால் பிசிசிஐ நடத்தும் பேச்சுவார்த்தை
சென்னை: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை ஓய்வு பெற பிசிசிஐ தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சுப்மன் கில்லின் எழுச்சியே முக்கிய காரணமாக அமைந்துள்ள நிலையில், 3 வகையான கிரிக்கெட்டுக்கும் 3 கேப்டன்கள் அவசியமில்லை என்று பிசிசிஐ கருதுவதாக சொல்லப்படுகிறது.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமலேயே இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தி இருக்கிறது.

சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவரை மேன்மைபடுத்த அடுத்தடுத்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதேபோல் 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்கா மண்ணில் நடக்கவுள்ளது. இதனை மனதில் வைத்தே ரோஹித், விராட் கோலி இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்காமல் காத்திருக்கின்றனர்.
ஆனால் 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது ரோஹித் சர்மாவுக்கு 40 வயதையும், விராட் கோலி 38 வயதையும் எட்டி இருப்பார்கள். இதனால் ரோஹித் சர்மா ஃபிட்னஸ் உடன் இருப்பாரா என்பதும், விராட் கோலி அதே ஃபார்மில் இருப்பாரா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு பதிலாக விராட் கோலி இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரையும், ரோஹித் சர்மா இடத்தில் ஜெய்ஸ்வாலையும் களமிறக்கி முயற்சிக்கலாம்.
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏராளமான இளம் வீரர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் விளம்பர வருவாயை மனதில் வைத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விவகாரத்தில் பிசிசிஐ எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது. ஆனால் சுப்மன் கில் எழுச்சி காரணமாக பிசிசிஐ ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. 3 வகையான கிரிக்கெட்டுக்கும் 3 கேப்டன்கள் தேவையில்லை என்று முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் ஆஸ்திரேலியா அணிக்கு ஒருநாள் தொடருடன் பிசிசிஐ வெளியில் அனுப்ப திட்டமிட்டு வருவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் விராட் கோலியும் கிரிக்கெட்டை கடந்து தொழிலில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். சொந்த நிறுவனம் ஒன்றை தொடங்கி முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடுவதே விராட் கோலியின் முடிவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனை கடந்து விராட் கோலி சிறந்த ஃபார்மில் இருக்கும் பட்சத்தில், சச்சினை போல் விராட் கோலிக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலி அத்தனை ஐசிசி கோப்பைகளையும் வென்றுவிட்ட நிலையில், விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications