பட்டன் வைத்த மொபைலே நமக்கு போதும்.. செல்போன் பயன்படுத்துவதில் தோனிக்கு இப்படியொரு சிக்கலா!
சென்னை: வாழ்க்கையில் பழைய காலத்தில் பயன்படுத்திய பட்டன் செல்ஃபோன் போதுமானது என்று சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனி தெரிவித்துள்ளார். தனக்கு செல்ஃபோனில் பேசுவது பெரிதாக பிடிக்காது என்று கூறிய தோனி, பணிகளுக்காக மட்டுமே செல்ஃபோன் பயன்படுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக டி20, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்று 3 வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்றவர் தோனி. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியுடன் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதன்பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே தோனி விளையாடி வருகிறார்.

கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய பின், வேறு வழியின்றி தோனி கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார். இதன்பின் புதிய வீரர்கள் சிலரை ஒப்பந்தம் செய்து, சிஎஸ்கே அணியை மாற்றி இருக்கிறார். இதனிடையே அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இன்னும் 4 மாதங்களில் அதற்கு விடை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தோனி வந்தார். இதன்பின் அந்த நிகழ்ச்சியில் தோனி பேசுகையில், நான் மொபைல் பயன்படுத்தாதற்கு காரணம் வேறு.. அனைவரிடம் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என்பது காரணம் கிடையாது. என்னை பொறுத்தவரை செல்ஃபோனில் பேசுவதே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. என்னால் பேசுபவரின் முகத்தை பார்க்க முடியவில்லை.
அவர்கள் எனது பேச்சிற்கு என்ன மாதிரியான ரியாக்ஷன்களை கொடுக்கிறார்கள் என்று தெரிவதில்லை. எதிரில் பேசுபவர் என்னிடம் பேச விரும்புகிறாரா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. நான் பேசும் தலைப்பு அவருக்கு பிடிக்கிறதா என்று கூட உறுதி செய்ய முடியாது. அதனால் யாரிடமும் பேசினாலும் நேரடியாக பேசவே விரும்புவேன். வார்த்தைகளை விடவும், நேரில் பார்த்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
நேரில் கிடைக்கும் சில தருணங்கள் செல்ஃபோனில் பேசும் போது கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே செல்ஃபோனில் யாரிடமும் பேசுவதில்லை. என்னுடைய பணிகளுக்காக மட்டுமே செல்ஃபோன் பயன்படுத்துகிறேன். அதேபோல் செல்ஃபோனில் அதிகளவில் டெக்னாலஜி வந்துவிட்டது. ஒவ்வொரு நபரின் கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் வந்துவிட்டது.
நமக்கு பட்டன் செல்ஃபோன்கள் போதுமானது. அதேபோல் எனது வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் பலரும் ஊக்கமாக அமைந்திருக்கிறார்கள். சிறுவயதில் கிரிக்கெட் ஆடிய போது சச்சின் மிகப்பெரிய ஊக்கமாக இருந்தார். நான் 1981ல் பிறந்தவன். சச்சின் 1989ல் இந்திய அணிக்காக விளையாட தொடங்கிவிட்டார். அதனை பார்த்து வளர்ந்திருக்கிறேன்.
பள்ளியில் சீனியர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் எனக்காக நேரம் கொடுத்துள்ளனர். நாங்கள் விளையாடும் போது எந்த நேரமும் எங்களின் ஆசிரியர்கள் உடனிருப்பார். நேரம் தவறாமை, ஒழுக்கம், பொறுப்பேற்று கொள்ளுதல், காதல் என்று ஒவ்வொரு விஷயமும் வாழ்க்கையில் சில நபர்களை சந்திக்கும் போது ஏற்றம் பெற்றுக்கொண்டே செல்லும்.
20 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் ஏராளமான மாற்றம் உள்ளது. அதேபோல் அந்த நேரத்தில் எனக்கு கிரிக்கெட் முக்கியமாக இருந்தது. இப்போது வேறு விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சில தருணங்களில் சிறந்த சிந்தனையுடன் புதிய மனிதர்களை சந்திக்கும் போது பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டு மனிதராக முன்னேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications