சமாளிக்க முடியுமானு கேட்டார்கள்.. சச்சின் சாதனையை முடித்த சுப்மன் கில்.. பிரின்ஸின் ஓஜி சம்பவம்!
பர்மிங்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 250 ரன்களை விளாசி இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் புதிய சாதனையை படைத்துள்ளார். வெளிநாட்டில் ஒரு சதம் கூட விளாசியதில்லை என்று சுப்மன் கில் மீது விமர்சனங்கள் குவிந்த நிலையில், 3 இன்னிங்ஸில் இரட்டைசதம் உட்பட 2 சதங்களை விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களை சேர்த்தது. சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர். தொடக்கம் முதலே விரைவாக இருவரும் ரன்களை சேர்க்க, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக முன்னேறியது.

இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்
ஜடேஜா அரைசதம் அடிக்க, சுப்மன் கில் 150 ரன்களை கடந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் களத்திற்கு வந்தார். அப்போது முதல் இந்திய அணியின் பேட்டிங் பொறுப்பை மொத்தமாக சுப்மன் கில் எடுத்து கொண்டார். அதிரடியாக பவுண்டரிகளாக விளாசிய சுப்மன் கில் 311 பந்துகளில் 200 ரன்களை விளாசி தள்ளினார்.
சச்சின் சாதனை முறியடிப்பு
இதன் மூலமாக இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் கண் இமைக்கும் நேரத்தில் 250 ரன்களை எட்டி, விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துவிட்டார். ஆசியாவுக்கு வெளியில் இந்திய வீரர் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் சச்சின் 241 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
சுப்மன் கில் மீது விமர்சனம்
இதன் மூலமாக சுப்மன் கணக்கில் எண்ண முடியாத அளவிற்கு சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சுப்மன் கில்லை கேப்டனாக அறிவித்த போது, வெளிநாடுகளில் ஒரு சதம் கூட அடித்திருக்கவில்லை. இவரால் எப்படி இங்கிலாந்து மண்ணில் கேப்டன்சி செய்ய முடியும். இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்தே சுப்மன் கில்லை அமைதியாக்கிவிடுவார்கள் என்று விமர்சனங்கள் எழுந்தன.
திருப்தி அடையாத சுப்மன் கில்
அதற்கேற்ப முதல் டெஸ்டிலேயே சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி புதிய சாதனைகளை படைத்திருக்கிறார். ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோரும் சதம் விளாசி இருந்தாலும், அவர்களுக்கும் சுப்மன் கில்லுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் இருவருமே சதம் அடித்தால் உடனடியாக திருப்தி அடைந்துவிடுகிறார்கள்.
இதுதான் கேப்டன்
ஆனால் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசிய போதும் திருப்தி அடையவில்லை. அவர் முகத்தில் இன்னும் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்ற எண்ணமே அதிகமுள்ளது. இதுதான் சுப்மன் கில் தொடர்ச்சியாக பெரிய ஸ்கோர்களை அடிக்க காரணமாக மாறி இருக்கிறது. இந்த இரட்டை சதம் மூலமாக சுப்மன் கில் விமர்சனங்களுக்கும் மிகப்பெரிய பதிலடியை கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications