"உனக்கு டீமில் இடமில்லை.." இந்தியா VS வங்கதேசம் போட்டியில் நட்சத்திர வீரருக்கு ஷாக் கொடுத்த கம்பீர்!
துபாய்: இன்று நடைபெறும் இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி தொடக்கப் போட்டியில் வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரரைக் கம்பீர் டிராப் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்திய அணி தான் விளையாடும் அனைத்து போட்டிகளையும் துபாயிலேயே விளையாடுகிறது.

வாஷிங்டன் சுந்தர்
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாட உள்ளார். ரவீந்திர ஜடேஜா அல்லது அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாட இருப்பதாகக் கூறப்பட்டது. நேற்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளை வைத்துப் பார்க்கும் போது, ஜடேஜா தான் வெளியே அமர வேண்டி இருக்கும் எனத் தெரிகிறது.

ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை
இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஜடேஜாவுடன் ஆவேசமாகப் பேசிக் கொண்டு இருந்த நிலையில், அந்த காட்சிகளை வைத்தே அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிபுணர்களான அபினவ் முகுந்த், பியூஷ் சாவ்லா மற்றும் மைக் ஹெசன் ஆகியோரும் கூட இதே கருத்துகளைத் தான் கூறியுள்ளனர். மறுபுறம் அக்சர் படேலிடம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து + ஆல்ரவுண்டர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது. முன்னதாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜடேஜா மற்றும் அக்சர் என இருவரும் விளையாடினர். இருப்பினும், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இருவரும் விளையாட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

என்ன காரணம்?
வங்கதேசத்தில் டாப் 7 பேட்டிங் பொசிஷனில் பல இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். குறிப்பாக டாப் 3 பேட்ஸ்மேன்கள்- தன்சித் ஹசன் மற்றும் சௌமியா சர்க்கார் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இடது கை பேட்ஸ்மேன்கள். ஜடேஜா மற்றும் அக்சர் இருவரும் இடது கை பவுலர்களாக உள்ள நிலையில், இரு வீரர்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து பியூஷ் சாவ்லா கூறுகையில், "வங்கதேசத்தின் பிளேயிங் லெவனில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இருப்பினும், என்னைக் கேட்டால் குல்தீப் இருப்பதால் ஜடேஜா மற்றும் அக்சர் இருவருமே விளையாட வேண்டும். இருவரும் அணிக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்" என்றார்.
கம்பீர் எடுத்த முடிவு
கம்பீரின் உடல் மொழியை வைத்துப் பார்த்தால் ஜடேஜாவுக்கே பிளேயிங் 11ல் வாய்ப்பு இருக்காது எனத் தெரிவதாக நியூசிலாந்து மற்றும் ஆர்சிபி முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "அவர் விளையாட மாட்டார் என்றே நினைக்கிறேன். கம்பீர் உடல் மொழியை வைத்துப் பார்த்தால் அப்படி தான் தெரிகிறது.. இது எனது முடிவு.. நான் முடிவெடுத்துவிட்டேன்.. நீ ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இதுவே எனது முடிவு.. உனக்கு அடுத்து போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம்.. ஆனால் இந்த போட்டியில் வாய்ப்பில்லை என்றே கம்பீர் சொல்வது போலத் தெரிகிறது" என்றார்.
ஜடேஜா ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டிகளில் கடந்த 12 ஆண்டுகளாகவே இந்தியா அணியின் நட்சத்திரமாக இருக்கிறார் ஜடேஜா. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவரை திடீரென அணியில் இருந்து வெளியேற்றுவது பெரும் விவாதத்தையே கிளப்பும்.












Click it and Unblock the Notifications