India vs Pakistan: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்: நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்த கேப்டன்கள்.. இதை நோட் பண்ணீங்களா
துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில், கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும் இந்த போட்டி, ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒருபக்கம் வலுத்து வந்தாலும், போட்டியை ஆர்வத்துடன் ஒரு தரப்பு ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். பரபரப்பான தருணத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் துவக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் நேருக்கு நேர் பார்ப்பதையும், கைகுலுக்குவதையும் தவிர்த்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்
17-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுடன் இருந்த அனைத்து விதமான உறவுகளையும் இந்தியா துண்டித்தது.
இத்தகைய சூழலில்தான், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடப்பதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதால், இந்திய அணி இந்த ஆட்டத்தில் பங்கேற்கிறது. இருப்பினும், இதனை தாங்கிக் கொள்ள முடியாத நெட்டிசன்கள் "இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணியுங்கள்" என்று ஹேஷ்டேக் உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வந்தனர்.
நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்த கேப்டன்கள்
கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த போட்டி நடைபெற்றாலும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பும் நிலவியது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
முன்னதாக, டாஸ் போடும் போது இரு நாட்டு கேப்டன்களும் நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தனர். அதாவது eye contact இன்றி, டாஸ் போடும் போது இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் சல்மான் அலி அகா நின்றனர்.
அதேபோல், டாஸ் முடிந்த பின் சம்பிரதாயமாக இரு அணிகளின் கேப்டன்களும் கை குலுக்குவதை காண முடியும். ஆனால் இன்றைய போட்டியில் அது நடைபெறவில்லை.
விராட் கோலி விளையாடவில்லை
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மோதின. அந்த போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. விராட் கோலி சதம் அடித்தார். விராட் கோலி 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றதால், அவர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
அதேபோல், ரோகித் சர்மாவும் 20 ஓவர் போட்டிகளில் தற்போது விளையாடுவதில்லை. சூர்யகுமார் யாதவ் தற்போது கேப்டன் பொறுப்பை வகிக்கிறார். இதற்கு முன்பாக, இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு மோதியது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications