ஆர்சிபி தலைவிதியை எழுதப்போகும் ஒரு பவுலர்.. தினேஷ் கார்த்திக் தேடி பிடித்தவர்.. பெங்களூர் அதிரும்!
மும்பை: 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாமல் இருக்கும் அணிகளில் முக்கியமானது ஆர்சிபி அணி. இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி ஆர்சிபி அணிக்காக ஆடி வரும் போதும் கூட அந்த அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்கும் போது, "ஈ சாலா கப் நம்தே" என்று ஆர்சிபி ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள்.
ஆனால் இம்முறை விராட் கோலியே, "ஈ சாலா கப் நம்தே" என்று கூறி இருக்கிறார். இருந்தாலும் 18வது ஐபிஎல் சீசனில் ஜெர்சி 18 அணிந்துள்ள விராட் கோலியின் கைகளுக்கு கோப்பை வந்து சேரும் என்று டி வில்லியர்ஸ் உட்பட அந்த அணியின் ரசிகர்கள் பலரும் ராசியை வைத்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஆர்சிபி அணி கடந்த 4 ஆண்டுகளாகவே கன்சிஸ்டன்சியுடன் விளையாடி வருகிறது.

ஆர்சிபி கன்சிஸ்டன்சி
கடைசியாக ஆடிய 4 சீசன்களில் 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இம்முறை மெகா ஏலத்திலும் ஆர்சிபி அணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். வழக்கமாக நட்சத்திர வீரர்களுக்கு பின்னால் ஓடும் ஆர்சிபி நிர்வாகிகள், இம்முறை கொஞ்சம் நிதானித்து பவுலர்களுக்கு அதிக தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.
ஆர்சிபி பவுலர்கள்
புவனேஷ்வர் குமார் ரூ.10.75 கோடிக்கும், ஹேசல்வுட்டை ரூ.12.50 கோடிக்கும் வாங்கி இருக்கிறார்கள். ஹேசல்வுட்டை வாங்க வேண்டும் என்று டிகே பிடிவாதமாக இருந்தார். அவர்களுடன் நுவான் துஷாரா, ரஷீக் தார், யாஷ் தயாள், இங்கிடி, சுயாஷ் சர்மா ஆகியோர் பவுலர்களாக வாங்கப்பட்டுள்ளனர். ஆர்சிபி மைதானத்தின் தன்மையை அறிந்து செயல்படக் கூடிய வீரர்களாக அனைத்து பவுலர்களும் இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
சுயாஷ் சர்மாவின் பணி
ஆனால் ஸ்பின்னர்களாக சுயாஷ் சர்மா, ஸ்வப்னில் சிங் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் மட்டுமே உள்ளனர். இதில் சுயாஷ் சர்மா மட்டுமே விக்கெட் டேக்கராக இருக்கிறார். அவர் மட்டும் மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஆர்சிபி அணி இம்முறை பல்வேறு ஆச்சரியங்களை கொடுக்கும். ஆனால் ஆர்சிபி அணியின் முக்கியமான பவுலராக ஹேசல்வுட் மட்டுமே இருக்கிறார்.
ஹேசல்வுட் முக்கியம்
ஏனென்றால் பவர் பிளேவின் கடைசியில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 ஓவர்களை ஹேசல்வுட் வீசுவார். எந்த பிட்ச் எந்த மைதானமாக இருந்தாலும் ஹேசல்வுட் பந்தை அடிப்பது சொந்த கையால் சூனியம் வைப்பதற்கு சமமாகும். ஏனென்றால் அவரின் லைன் மற்றும் லெந்த் அவ்வளவு எளிதாக மாறாது. ஹேசல்வுட்டை சுற்றியே பவுலிங் வரிசையை ஆர்சிபி அணி கட்டமைத்துள்ளது.
பலமான பேட்டிங்
இதனால் ஹேசல்வுட்டுக்கு உதவியாக ஒரு பவுலர் செயல்பட்டாலும், ஆர்சிபி அணியால் கோப்பையை கூட வெல்ல முடியும். ஏனென்றால் பில்ம் சால்ட், விராட் கோலி, ஜித்தேஷ் சர்மா, ரஜத் பட்டிதார், லிவிங்ஸ்டன், டிம் டேவிட், க்ருணால் பாண்டியா என்று பேட்டிங் வரிசை பட்டாசாய் அமைந்துள்ளது. இதனால் ஹேசல்வுட்டின் பவுலிங்கே ஆர்சிபி அணியின் 18வது சீசன் தலைவிதியை நிர்ணயிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்டி பிளவர் கட்டமைத்த அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications