அந்த மனுஷன் சிஎஸ்கே ஜாம்பவான்.. குஜராத் அணியின் தரமான செய்கை.. பேட்டிங் கோச்சான அதிரடி மன்னன்!
மும்பை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணிக்காக 3 சீசன்களில் ஆடிய ஹெய்டன் அதன்பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். தற்போது பயிற்சியாளராக மீண்டும் குஜராத் அணியில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்ட சூழலில், கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் அடுத்ததாக ஐபிஎல் பக்கம் திரும்பி இருக்கிறது. ஏற்கனவே சோசியல் மீடியாவில் ஐபிஎல் ஃபீவர் தொடங்கிவிட்ட சூழலில், ஒவ்வொரு அணி தொடர்பாகவும் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனர். இதனால் விரைவில் ஐபிஎல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஐபிஎல் அணிகள் அனைத்தும் ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டன. மார்ச் 1ஆம் தேதி பயிற்சி முகாம்களை தொடங்கி வீரர்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி தரமான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் செயல்பட்டு வந்தார்.
தற்போது பார்த்தீவ் படேல் துணை பயிற்சியாளராக தொடரும் சூழலில், புதிய பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2010 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர் மேத்யூ ஹெய்டன். இவரால் மட்டுமே இந்தியாவில் மங்கீஸ் பேட் பிரபலம் அடைந்தது. சிஎஸ்கே அணிக்காக ஏராளமான போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.
சிஎஸ்கே அணியுடனும், சிஎஸ்கே ரசிகர்களுடனும் ஏற்பட்ட பந்தம் காரணமாக டிஎன்பிஎல் உள்ளிட்ட தொடர்களையும் பார்வையாளராக பார்க்க வந்தார். இதன்பின் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்த ஹெய்டன், 2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். தொடர்ந்து 2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராகவும் இருந்தார்.
இதன்பின் அந்த பொறுப்பில் இருந்து விலகிய ஹெய்டன், தற்போது ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக களம் புகுந்துள்ளார். 90ஸ் கிட்ஸின் அதிரடி மன்னனாக வலம் வந்த ஹெய்டனின் அணுகுமுறை ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கும். இதனால் குஜராத் அணிக்கு மிகப்பெரிய பலமாக ஹெய்டன் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே உற்சாகம் அளித்தாலும், சென்னை அணிக்கு வரவில்லையே என்று சோகத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications