பஞ்சாப் - டெல்லி ஐபிஎல் போட்டி திடீரென ரத்து.. தரம்சாலா மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேற்றம்!
தரம்சாலா: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் - டெல்லி இடையிலான ஆட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்த நிலையில், திடீரென மைதானத்தில் இருந்த ஒளி விளக்குகள் அமர்ந்தன. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டதோடு, அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கடந்த சில வாரங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கு கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தாக்குதலே காரணமாக அமைந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பல்வேறு விளக்கங்களையும் அளித்திருக்கிறது. இந்த நிலையில் இன்று திடீரென பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறி வைத்து தாக்குதலை தொடங்கியது. ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த முயற்சிகளை பாகிஸ்தான் செய்தது.
ஆனால் அதனை இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்தது. இதனிடையே பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முயற்சி காரணமாக தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய நிலையில், பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து வந்தது.
அப்போது திடீரென மைதானத்தில் இருந்த ஒளி விளக்குகள் அணைக்கப்பட்டு, வீரர்கள் உடனடியாக ஓய்வறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதேபோல் வீரர்களும் உடனடியாக அங்கிருந்து ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் அருகே உள்ள ஹிமாச்சல் பிரதேசத்தில் மாநிலத்தில் தரம்சாலாவில் இந்த மைதானம் அமைந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தரம்சாலாவில் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டுமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தது.
அதுமட்டுமல்லாமல் தரம்சாலா விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தரம்சாலா அருகே உள்ள பதான்கோட் பகுதியில் பாகிஸ்தான் அட்டாக் செய்திருப்பதாக கூறப்பட்டது. அதனை இந்திய ராணுவம் சிறப்பாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்திருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications