"நீ ஒரு முஸ்லீம்.." வன்மத்தை கக்கிய நெட்டிசன்கள்.. அதற்கு ஷமி கொடுத்த தரமான பதிலடி.. சபாஷ்!
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஷமி மீது சிலர் மத ரீதியாக மோசமான விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முகமது ஷமி நறுக்கென பதில் கொடுத்துள்ளார். அவரது பதில் இப்போது இணையத்திலும் டிரெண்டாகி வருகிறது.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நேற்று வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டியை இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது என்றே சொல்லலாம்.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்யின்ஸ் டிராபி தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
ஷமி
இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பவுலிங் தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது.. ஷமி 2023 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு கணுக்கால், குதிகால் மற்றும் முழங்கால் என வரிசையாகக் காயங்கள் ஏற்பட்டதால் பல மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டி இருந்தது. அவர் கடந்தாண்டு இறுதியில் தான் மீண்டும் பந்துவீச தொடங்கினார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பிய ஷமி 53 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தியது இந்திய அணியின் பவுலிங் யூனிட்டிற்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
காயத்தில் இருந்து மீண்டது எப்படி
போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷமி, "உலகக் கோப்பை எனக்கு மிகச் சிறப்பாக இருந்தது. அப்படியொரு ஃபார்மை திடீரென காயத்தால் இழக்க நேரிட்டது.. அந்த 14 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தது. நான் எல்லாவற்றையும் மீண்டும் செய்ய வேண்டியிருந்தது.. இருப்பினும், அதன் பிறகு நான் விளையாடிய உள்ளூர் போட்டிகளும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியும் எனது நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியது.
விக்கெட்கள்
நான் எப்போதும் பவுலிங்கில் புதிய முயற்சிகளைச் செய்வேன்.. குறிப்பாக ஐசிசி போட்டிகளில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தால் குறைந்தபட்சம் விக்கெட்களை எடுக்க வேண்டும் என நினைப்பேன். காயத்தில் இருந்தபோது என்னால் விளையாட முடியவில்லை என்ற கவலை இருந்தது. ஆனால், அப்போது எனக்கு வேறு ஆப்ஷன் இல்லை. இந்திய அணியின் மேட்ச்களை பார்ப்பது மட்டுமே வழியாக இருந்தது" என்றார்.
மத ரீதியான விமர்சனங்கள்
கடந்த காலங்களில் முகமது ஷமி மீது மதத்தை வைத்து சில நெட்டிசன்கள் வன்மத்தைக் கக்கியிருந்தனர். அப்போதெல்லாம் விராட் கோலியும் சரி, சக வீரர்களும் சரி ஷமிக்கு பக்க பலமாகவே இருந்துள்ளனர்.
இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஷமி, "சமூக வலைத்தளங்களில் சிலர் பேசுவதைக் கேட்டால் அது மனதில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும். இதுபோன்ற விஷயங்களைப் பற்றிச் சிந்திக்க எனக்குப் பிடிக்காது. உங்களின் மோசமான ஆட்டத்தை மக்கள் குறிப்பிடுவார்கள். அது உங்களைப் பாதிக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் வீரராக நான் பழைய விஷயம் குறித்து அதிகம் சிந்திக்க விரும்ப மாட்டேன். நிகழ் காலம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் மட்டுமே யோசிப்பேன் என்றார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து இந்திய அணி வரும் பிப்ரவரி 23ம் தேதி பாகிஸ்தான் அணியையும் வரும் மார்ச் 2ம் தேதி நியூசிலாந்து அணியையும் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications