3 மாதங்களுக்கு முன்பே தயாராகும் தோனி.. இம்பேக்ட் பிளேயராலாம் இல்லை.. ரெடியாகும் சிஎஸ்கே ரசிகர்கள்!
ராஞ்சி: 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி பயிற்சியை தொடங்கி இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானத்தில் தோனி பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், அதன் வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் இன்னும் 2 வாரங்களில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடர், மார்ச் 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான அத்தனை அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் தங்களின் அணிகளை அறிவித்துவிட்டன.

இந்த டி20 உலகக்கோப்பை நிறைவடைந்து 2 வாரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் சவுதி அரேபியாவில் சிறப்பாக நடைபெற்றது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேட் ஹென்ரி, ஃபோல்க்ஸ், மேத்யூ ஷார்ட், ராகுல் சஹர், அகீல் ஹொசைன் உள்ளிட்டோர் வாங்கப்பட்டனர்.
அதேபோல் சிஎஸ்கே அணியின் தோனி, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் இருந்த போதும் விக்கெட் கீப்பரான கார்த்திக் சர்மா வாங்கப்பட்டார். இதனால் சிஎஸ்கே ஜாம்பவான் வீரரான தோனி முழு சீசனிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. அதேபோல் இதுதான் தோனியின் கடைசி சீசன் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
44 வயதாகும் தோனி, இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இம்பேக்ட் பிளேயராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானத்தில் தோனி பேட்டிங் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்.
இதனை வீடியோவாக எடுத்து அம்மாநில கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் தோனி பயிற்சியை தொடங்கிவிட்டதாக கொண்டாடி வருகின்றனர். இதனால் அடுத்த சீசன் முழுக்கவே தோனி களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications