பெங்களூரை மறக்க முடியுமா? இது என் பெற்றோரின் ஊர்! நெகிழ்ந்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா
பெங்களூர்: 50 ஓவர் உலககோப்பையின் முதல் போட்டியில் நேற்று இங்கிலாந்தை தனது அதிரடி சதத்தால் தோற்கடித்த நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திரா பெங்களூர் குறித்து நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். அவரிடம் கன்னடத்தில் கேள்விகள் கேட்கப்பட்ட அதனை அவர் புரிந்து கொண்டு ஆங்கில மொழியில் பதிலளித்து அசத்தினார். அவர் பெங்களூர் பற்றி என்ன சொன்னார்? வாங்க பார்க்கலாம்.
50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் டக் அவுட் ஆனார். அதன்பிறகு இந்திய வம்சாவளி (பெங்களூரை சேர்ந்தவர்) வீரரான ரச்சின் ரவீந்திரா களம் புகுந்தார். இவர் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வேயுடன் அதிரடியாக ஆடினார். இருவரும் அடுத்தடுத்து சதமடித்தனர்.
போட்டியின் முடிவில் 36.2 ஓவரில் 283 ரன்கள் எடுத்து நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியில் டெவான் கான்வே 121 பந்துகளில் 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 123 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் நியூசிலாந்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். உலககோப்பையில் முதல் போட்டியில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா அறிமுக போட்டியிலேயே அதிரடியாக சதமடித்தார்.
இந்நிலையில் தான் இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திரா குறித்து பலரும் இணையதளங்களில் தேடத்தொடங்கி உள்ளனர். இதனால் அவர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளார். இந்நிலையில் தான் ரச்சின் ரவீந்திராவுக்கும், கர்நாடகா தலைநகர் பெங்களூருவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால் ரச்சின் ரவீந்திராவின் பூர்வீகம் என்பது பெங்களூர் தான்.
ரச்சின் ரவீந்திராவின் தாத்தாவான டிஏ பாலகிருஷ்ணா அடிகா பெங்களூர் பசவனகுடியில் உள்ள விஜயா கல்லூரியில் பேராசிரியாக இருந்தார். தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி சாப்ட்வேர் ஆர்க்கிடெக்ட் ஆக இருந்தார். இவர் தனது இளமை பருவத்தில் கிளப் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்காக ஆடினார். அதன்பிறகு பணி நிமித்தமாக ரவி கிருஷ்ணமூர்த்தி நியூசிலாந்து சென்ற நிலையில் அங்கேயே குடியுரிமை பெற்று வசிக்க தொடங்கினார்.
ரவி கிருஷ்ணமூர்த்திக்கு கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் என்பது அதிகமாக இருந்தது. இதனால் தான் சச்சின் டெண்டுல்கர், டிராவிட் ஆகியோரின் நினைவாக ரச்சின் ரவீந்திரா என தனது மகனுக்கு பெயர் சூட்டினார். இந்நிலையில் தான் நேற்றைய போட்டி முடிந்த பிறகு வர்ணனையாளர்கள் 2 பேர் அவரிடம் பேட்டி எடுத்தனர். அப்போது பெங்களூரை சேர்ந்தவர் என்பதால் கன்னடத்தில் கேள்வி கேட்கிறோம். பதில் அளியுங்கள் என கேட்டனர்.
அதற்கு ரச்சின் ரவீந்திரா, ‛‛மன்னிக்கவும், எனக்கு கன்னடம் புரியும். ஆனால் பேசுவதில் தடுமாற்றம் ஏற்படும். இதனால் நீங்கள் கன்னடத்தில் கேள்வி கேளுங்கள். நான் அதனை புரிந்து ஆங்கிலத்தில் பதிலளிக்கிறேன்'' எனக்கூறினார். இதையடுத்து பெங்களூர் நினைவுகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்டகப்பட்டது. அதற்கு ரச்சின் ரவீந்திரா கூறியதாவது:
எனது பெற்றோர் பிறந்த ஊர் பெங்களூர். உண்மையில் அங்கு உலககோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் விளையாட(நவம்பர் 4 பாகிஸ்தான்-நியூசிலாந்து மோதல்) இருக்கிறேன். இந்த போட்டியில் எனக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.
மேலும் பெங்களூர் என்றால் எனது குடும்பம் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் நான் பெங்களூரில் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டுள்ளேன். என் தாத்தா-பாட்டியை வில்சன் கார்டனில் பார்த்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. எனது தாய்வழி உறவினர்கள் இஸ்ரோ படாவனேயில் உள்ளனர். நான் பெங்களூர் வரும்போதெல்லாம் அவர்களை பார்க்க முயற்சிப்பேன். அது எனக்கு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்.
எனது தந்தை ஆண்டுக்கு ஒருமுறை அவரது வயதுடைய நண்பர்களுடன் பெங்களூர் வருவார். கடந்த 2019ல் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டி பைனல் போட்டியை நாங்கள் பெங்களூரில் உள்ள ஸ்ட்டாக் எக்சேஞ்ச் பாரில் இருந்து பார்த்தேன். அந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இருப்பினும் எங்களுக்கு இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது. அந்த போட்டியின்போது என்னை சுற்றி நிறைய இந்தியர்கள் இருந்தனர். அத்தகைய தருணத்தை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications