இதுதான்டா கம்பேக்.. முதல் போட்டியிலேயே கொடி நாட்டிய நடராஜன்.. 3 விக்கெட்டை வீழ்த்தி சம்பவம்!
லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். கடந்த சீசனில் காயம் காரணமாக நடராஜன் பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத சூழலில், இந்த சீசனில் முதல் போட்டியிலேயே மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் லக்னோ அணிக்காக ரிஷப் பண்ட் - மிட்சல் மார்ஷ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் பண்ட் 7 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, லக்னோ அணியின் சரிவு தொடங்கியது.

அப்துல் சமாத் மட்டும் பொறுப்புடன் விளையாடி 25 பந்துகளில் 36 ரன்களை சேர்த்தார். அதேபோல் மிட்சல் மார்ஷ் 28 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இருப்பினும் 18.4 ஓவர்களில் லக்னோ அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. டெல்லி அணிக்காக இங்கிடி மற்றும் நடராஜன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தப் போட்டி தமிழக வீரர் நடராஜனுக்கு மிகச்சிறந்த கம்பேக் போட்டியாக அமைந்துள்ளது. ஏனென்றால் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக பெரிய தொகை கொடுத்து நடராஜன் வாங்கப்பட்ட போது, காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடினார். இருப்பினும் டெல்லி அணி நடராஜன் மீது நம்பிக்கை வைத்து ரீடெய்ன் செய்தது. அதற்கு நன்றிக்கடனாம நடராஜன் முதல் போட்டியிலேயே சம்பவம் செய்துள்ளார்.
பவர் பிளே ஓவர்கள் முடிந்த பின் உடனடியாக நடராஜன் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஆயுஷ் பதோனியின் விக்கெட்டை எளிதாக வீழ்த்திய அவர், முதல் 2 ஓவர்களில் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்தார். 3வது ஓவரில் நடராஜன் கொஞ்சம் ரன்களை விட்டுக் கொடுத்தாலும், கடைசி ஓவரில் இறுக்கி பிடித்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய அப்துல் சமாத் மற்றும் முகமது ஷமி ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனால் 4 ஓவர்களை வீசிய நடராஜன் 29 ரன்களை விட்டுக் கொடுத்து 8 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்தப் போட்டியில் நடராஜன் அதிகளவில் வேகமான பந்துகளை வீசவில்லை. 135கிமீ வேகத்திற்கும் குறைவாகவே நடராஜன் பந்துகளை வீசினார். சில பந்துகளில் 120 கிமீ வேகத்தில் மித வேக பந்துகளாகவே இருந்தன. இருந்தாலும் லைன் மற்றும் லெந்தில் நடராஜன் தவறவிடவில்லை.
அதேபோல் காயத்தில் இருந்து நடராஜன் வந்திருப்பதால், உடலில் அதிகமாக அழுத்தம் கொடுக்கவில்லை. பவுலிங் ரன் அப்பிலும் நிதானமாகவே இருந்தார். இதனால் இந்த சீசனில் நடராஜன் நிச்சயம் தடம் பதிப்பார் என்று பார்க்கப்படுகிறது. யார்க்கர் பந்துகள் மட்டுமல்லாமல் பவுன்சர் மற்றும் லெந்த் பந்துகளையும் நடராஜன் வீச தொடங்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications