நம்ம பையன் சார்.. 4 விருதுகளை அள்ளிக்கொண்டு வந்த சாய் சுதர்சன்.. இந்திய அணியின் எதிர்காலமே!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகளில் முக்கியமான 4 விருதுகளை தமிழ்நாட்டின் சாய் சுதர்சன் கைப்பற்றி உள்ளார். இதனால் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்து சாய் சுதர்சன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடிய ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால் ஆர்சிபி அணியின் வீரர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் ஆக்ரோஷமாக கொண்டாடி வருகின்றனர்.

சாய் சுதர்சன் சாதனை
இதனால் இந்திய மக்களின் கண்கள் விராட் கோலி பக்கம் மீண்டும் திரும்பி இருக்கிறது. ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விராட் கோலியை மீறி மற்றொரு இளம் வீரர் அனைவரின் கவனத்தையும் திருப்பி வியந்து பார்க்க வைத்துள்ளார். அது யாரென்றால் குஜராத் அணிக்காக களமிறங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் தான்.
4 விருதுகள்
மொத்தமாக 4 விருதுகளை சாய் சுதர்சன் அள்ளி வந்துள்ளார். இந்த சீசனில் மட்டும் சாய் சுதர்சன் 15 போட்டிகளில் விளையாடி 6 அரைசதம், ஒரு சதம் உட்பட 759 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றி சாதனை படைத்தார்.
என்னென்ன விருது?
தமிழ்நாட்டில் இருந்து ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களில் ஆரஞ்சு கேப்பை வென்ற முதல் வீரர் சாய் சுதர்சன் தான். அதேபோல் இளம் வீரர்களுக்கு வழங்கப்படும் எமர்ஜிங் பிளேயர் விருதையும் சாய் சுதர்சன் கைப்பற்றி இருக்கிறார். அதேபோல் ஃபேண்டஸி கிங் ஆஃப் தி சீசன் விருது மற்றும் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரருக்கான விருது ஆகியவற்றையும் சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.
எழுந்த விமர்சனங்கள்
இதனால் சாய் சுதர்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன் இடம்பிடித்துள்ளார். இதனால் இந்திய அணியில் சாய் சுதர்சன் நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல் க்ரீஸை பயன்படுத்தி ரன்களை குவிக்கும் சாய் சுதர்சன், ஐபிஎல் தொடருக்கு செட்டாக மாட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
ஐபிஎல் தொடரில் வெறும் பவர் ஹிட்டிங் மட்டுமல்லாமல், கிரிக்கெட் இலக்கணத்தின் படி விளையாடும் வீரர்களாலும் ரன்களை குவிக்க முடியும் என்பதை சாய் சுதர்சன் சாதித்து காட்டி இருக்கிறார். இதனால் முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு பின் தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பெரிய பேட்ஸ்மேனாக சாய் சுதர்சன் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications