கிரீஸிற்கு வரும் முன்பே எதிரணிகளுக்கு நடுக்கம்.. சூர்யவன்ஷி கொடுத்த தாக்கம் இது.. சச்சின் நெகிழ்ச்சி
மும்பை: சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது அதிரடியால் திரும்பிப் பார்க்க வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், "வைபவ் சூர்யவன்ஷி அடித்த ரன்களை விட, அவர் எதிரணிகளுக்குள் ஏற்படுத்திய தாக்கம் தான் மிக முக்கியமானது" என்று புகழ்ந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 15 வயதே ஆன அன்-கேப்டு வீரர் ஆவார்.

"வைபவ் சூர்யவன்ஷி எடுத்த ரன்களையும் தாண்டி போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் பேட்டிங் செய்ய கிரீஸிற்கு வருவதற்கு முன்பே, எதிரணிகள் அவரை எப்படி அவுட் ஆக்குவது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டன. அணிகள் அவருக்காகத் தனி வியூகங்களை வகுத்தன" என்று சச்சின் கூறியுள்ளார்.
லீக் போட்டிகள் மட்டுமின்றி பிரஷர் அதிகமாக இருக்கும் எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் போன்ற பிளே-ஆஃப் போட்டிகளிலும் சூர்யவன்ஷி அதே அதிரடி வேகத்துடன் ஆடிய விதம் சச்சினை மிகவும் கவர்ந்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்பை வென்றதோடு, ஒற்றை ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெய்லின் வரலாற்றுச் சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளார்.
சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒட்டுமொத்த அணுகுமுறையையே மாற்றியதாக சச்சின் நம்புகிறார். "அவர் களத்திற்குள் நடந்து வரும் ஒவ்வொரு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குள்ளே ஒரு புதிய உத்வேகமும், நம்மால் வெல்ல முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையும் பிறந்தது" என்று சச்சின் டெண்டுல்கர் தனது பதிவை நெகிழ்ச்சியுடன் முடித்துள்ளார்.
இளம் வீரர்களை ஆரம்பத்திலேயே அதிக பிரஷருக்குள் தள்ளக் கூடாது என்றும், சூர்யவன்ஷி தனது இயல்பான ஆட்டத்தை விளையாட கிரிக்கெட் உலகம் அவரை அனுமதிக்க வேண்டும் என்றும் சச்சின் அறிவுறுத்தியுள்ளார். இதனால் விரைவில் இந்திய அணிக்குள் வைபவ் சூர்யவன்ஷி கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications