சியர் லீடர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ரசிகர்கள்.. பாய்ந்த பெண் போலீசார்! லக்னோவில் பரபரப்பு
லக்னோ: லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது சியர்லீடர்களிடம் சில ரசிகர்கள் அத்துமீற முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வந்த பின், உடனடியாக பெண் போலீசார் பலரும் அங்கு அனுப்பப்பட்டு ரசிகர்களை பிடித்து எச்சரிக்கை வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை இரவு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான லீக் ஆட்டம் நடைபெற்றது. பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கிறது.

இந்தப் போட்டியின் போது மைதானத்தில் அரங்கேறிய ஒரு விபரீத சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் போது, மைதானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்த ரசிகர்கள் சிலர், அங்கிருந்த சியர் லீடர்களிடம் தொடர்ந்து அநாகரீகமாக நடந்துகொண்டு, அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சியர் லீடர்களுக்கு தொல்லை கொடுத்த ரசிகர்களின் அத்துமீறல் எல்லை மீறியதை அடுத்து, மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த லக்னோ காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்தனர். குறிப்பாக, பெண் போலீசார் அந்த ரசிகர்களைச் சூழ்ந்துகொண்டு, அவர்களைக் கடுமையாக எச்சரித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சியர் லீடர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர்களைப் பெண் போலீசார் பிடித்து விசாரிக்கும் காட்சிகளும், அவர்களை எச்சரிக்கும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகின்றன. ஐபிஎல் போட்டிகளின் போது சியர் லீடர்கள் மற்றும் பெண் ரசிகர்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவது இது முதல் முறையல்ல.
லக்னோ மைதானத்தில் போலீசார் காட்டிய இந்த உடனடி அதிரடி ஆக்ஷனுக்குப் பாராட்டுக்கள் குவிந்தாலும், இதுபோன்ற நபர்களை மைதானத்தை விட்டே நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரும் காலங்களில் சியர்லீடர்கள் இருக்கும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற வாதங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications