பாகிஸ்தானை வீழ்த்திய கையோடு.. மைதானத்திலேயே "பஹல்காம்" தாக்குதல் பற்றி சூர்யகுமார் சொன்ன வார்த்தை!
துபாய்: ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா அணி வீழ்த்தியது. இந்த வெற்றியை நாடு முழுக்க இருக்கும் இந்திய ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் நிலையில், இந்த வெற்றிக்குப் பிறகு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சொன்ன சில விஷயங்கள் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
ஆசிய கோப்பை 2025 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடரும் நிலையில், இதனை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.

இந்திய அணி
அதேநேரம் பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்த போட்டியை இந்தியா புறக்கணித்திருக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர். இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்ற இந்திய அணி இந்த வெற்றியை இந்திய ஆயுதப் படைகளுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல்
அவர் மேலும் கூறுகையில், "இதைச் சொல்ல இதுவே சரியான தருணம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம்.. இந்த வெற்றியை நமது ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர்கள் தைரியத்தையும் துணிச்சலையும் காட்டினார்கள். அவர்கள் தொடர்ந்து நம் அனைவருக்கும் ஊக்கமளிக்க வேண்டும்" என்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை மேலும் மோசமடைந்தது. இதற்குப் பதிலடியாகக் கடந்த மே மாதம் இந்தியா 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இந்த நடவடிக்கையால் ராணுவ மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. பின்னர், பாகிஸ்தானின் போர் நிறுத்த கோரிக்கை விடுத்ததால் மோதல் முடிவுக்கு வந்தது.
சூர்யகுமார் யாதவ்
இப்படியொரு சூழலில் தான் இந்தியா பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்த வந்தனர். ஆனாலும், போட்டியில் விளையாடிய இந்தியா அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றி குறித்து சூர்யா குமார் யாதவ் மேலும் கூறுகையில், "இந்தப் போட்டியை மற்றொரு சாதாரண போட்டியை போல தான் நாங்கள் அணுகினோம்.. அதேநேரம் வெல்வது என்பது ஒரு சிறந்த உணர்வு தான். எல்லா போட்டிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறவே விரும்புவோம்" என்றார்.
ஆசிய கோப்பை
ஆசிய கோப்பையில் இதுவரை இரு லீக் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தனது அடுத்த லீக் போட்டியில் ஓமன் அணியை வரும் அக்டோபர் 19ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.இப்போது இந்தியா க்ரூப் சுற்றில் முதலிடத்தில் இருப்பதால் நிச்சயம் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். சூப்பர் 4 சுற்று வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் நடக்கும். அதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், வரும் செப்டம்பர் 28ம் தேதி இறுதிப் போட்டியில் மோத உள்ளன.












Click it and Unblock the Notifications