ஸ்பின்னர்களை பார்த்தாலே பயம்.. அபிஷேக் சர்மா, திலக் வர்மாவுக்கு செக்! இந்திய அணிக்கு ஆப்பு நிச்சயம்?
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா, திலக் வர்மா உள்ளிட்டோர் மோசமான ஃபார்மில் இருப்பது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. சூப்பர் 8 சுற்று தொடங்க இருக்கும் சூழலில், இந்திய டாப் ஆர்டர் பலமின்றி இருப்பதால், ரசிகர்கள் கவலை அடைந்திருக்கின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் 4 போட்டிகளில் விளையாடி 4லும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தினாலும், இந்திய அணி சில பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களில் இஷான் கிஷன் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார்.

தொடக்க வீரராக வரும் அபிஷேக் சர்மா 3 இன்னிங்ஸில் தொடர்ச்சியாக டக் அவுட்டாகி ஏமாற்றி இருக்கிறார். மறுபக்கம் திலக் வர்மா 4 இன்னிங்ஸில் ஒரு போட்டியில் கூட சிறந்த இன்னிங்ஸை ஆடவில்லை. நல்ல தொடக்கம் கிடைத்த போதும் திலக் வர்மா இப்படியான இன்னிங்ஸை ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த இருவரின் மோசமான ஆட்டத்தால் நல்ல ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் மீதும் அழுத்தம் உருவாகிறது. இதனால் சிவம் துபே, ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரையே இந்திய அணி நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அதேபோல் ஐசிசி கண்காணிப்பில் பிட்ச் இருப்பதால், 200 ரன்கள் சேர்ப்பதே கடினமாக உள்ளது.
இதனால் ஒவ்வொரு போட்டியிலும் பும்ரா, வருண் சக்கரவர்த்தி தான் இந்திய அணியை காப்பாற்றி வருகின்றனர். இந்திய அணியில் ஏராளமான சிக்கல் இருக்கும் சூழலில், சூப்பர் 8 சுற்று தொடங்குகிறது. இந்திய அணி பேட்ஸ்மேன்களின் மிக முக்கிய பிரச்சனையாக ஸ்பின் இருக்கிறது. ஸ்பின்னர்களை முதல் ஓவரிலேயே கொண்டு வந்து அபிஷேக் சர்மாவுக்கு எதிராக எதிரணிகள் கட்டம் கட்டிவிடுகிறார்கள்.
அதற்கேற்ப அபிஷேக் சர்மா கொஞ்சம் கூட தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. சஞ்சு சாம்சன் 5 இன்னிங்ஸில் முறையாக விளையாடாததால், அவர் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். ஆனால் அபிஷேக் சர்மா கடைசியாக ஆடிய 7 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட்டாகி இருக்கிறார்.
இதனால் சஞ்சு சாம்சனே பரவாயில்லை என்று ரசிகர்கள் பேச தொடங்கிவிட்டனர். வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளில் தரமான ஸ்பின்னர்களும், அதிரடி பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர். அவர்களை சமாளிக்க இந்திய அணி இப்படியான ஃபார்மில் சென்றால், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதே கடினம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications