இதுதான் சான்ஸ்.. அகமதாபாத்தில் அற்புதம் செய்யப்போகும் அபிஷேக் சம்ரா.. மலை போல் நம்பும் கம்பீர்!
அகமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா ஃபார்மை மீட்டெடுக்க அற்புதமான வாய்ப்பு அமைந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டாகி இருப்பதால், சூப்பர் 8 சுற்றுக்கு முன்பாக இந்தப் போட்டியை அபிஷேக் சர்மா பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இதனால் இந்தப் போட்டியை இந்திய அணி வீரர்கள் ஃபார்முக்கு வருவதற்கான பயிற்சி ஆட்டமாகவே கருதுவார்கள். அதுமட்டுமல்லாமல் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இதனால் முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் களமிறக்கப்பட உள்ளனர். பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ஆனால் அபிஷேக் சர்மா இன்னும் டி20 உலகக்கோப்பையில் முதல் ரன்னையே எடுக்கவில்லை.
அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டாகிய அபிஷேக் சர்மா, நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் வயிற்று வலி காரணமாக களமிறங்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினாலும், அவர் மீண்டும் டக் அவுட்டாகினார். இதனால் அபிஷேக் சர்மா ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
அதேபோல் அபிஷேக் சர்மாவை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவும் இந்திய அணி நிர்வாகம் தயாராக இல்லை. அவர் இரு போட்டிகளிலும் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து விட்டதால், பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை என்றே கூறி இருக்கிறது. இப்படியான சூழலில் பேட்டிங்கிற்கு சாதகமான அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதனை அபிஷேக் சர்மா பயன்படுத்திக் கொள்வார் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை இந்தப் போட்டியிலும் அபிஷேக் சர்மா சொதப்பினால், இந்திய அணி மாற்று திட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும். அப்போது சஞ்சு சாம்சன் மீண்டும் சீனுக்குள் கொண்டு வரப்படலாம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications