776 ரன்கள் அடித்தும் ஏமாற்றம்.. தோல்வியால் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. ஓடிவந்து ஆறுதல் கூறிய பட்லர்
மும்பை: ஐபிஎல் சீசன் முழுவதும் தனது அசாத்திய சிக்சர் மழையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்த ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, நாக்-அவுட் சுற்றில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சியான காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற இலக்கை 18.4 ஓவர்களில் சேஸிங் செய்து அசத்தியது. இருப்பினும் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 47 பந்துகளில் 96 ரன்களை விளாசியது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வைபவ் சூர்யவன்ஷி பவர்ப்ளேயில் உலக சாதனை படைத்து அதிரடி காட்டிய போதிலும், அணியின் துரதிர்ஷ்டவசமான தோல்வியால் இறுதிப்போட்டி வாய்ப்பை ராஜஸ்தான் அணி இழந்தது. இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி உடைந்து போனார்.
போட்டி முடிந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, டக்-அவுட் பகுதியில் அமர்ந்திருந்த வைபவ் சூர்யவன்ஷி தனது முகத்தை கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். ஒரு சிறுவன் இவ்வளவு பெரிய நாக்-அவுட் போட்டியின் அழுத்தத்தையும், தோல்வியின் வலியையும் தாங்க முடியாமல் அழுவதைக் கண்ட சக வீரர்கள் உடனடியாக ஓடிவந்து கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் மற்றும் முகமது சிராஜ் போன்ற மூத்த வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியின் தோளைத் தட்டி, "நீ இந்த சீசனில் ஆடிய ஆட்டம் அசாத்தியமானது, எதற்கும் கவலைப்படாதே" எனப் பாராட்டி தேற்றியது மைதானத்தில் இருந்த ரசிகர்களை நெகிழ வைத்தது. பட்லரும் கூட சில நிமிடங்கள் அவருடன் உரையாடி சென்றார்.
ஒரே ஐபிஎல் சீசனில் பவர்ப்ளே ஓவர்களில் மட்டுமே 521 ரன்கள் குவித்து, உலகிலேயே பவர்ப்ளேயில் 500 ரன்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற வரலாற்றுச் சாதனையை இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். மேலும் கிறிஸ் கெய்லின் 59 சிக்சர்கள் சாதனையை முறியடித்து, அதிவேகமாக 1000 ஐபிஎல் ரன்களைக் கடந்த வீரர் என்ற மகுடத்தையும் சூடினார்.
ஆனால், இத்தனை தனிநபர் சாதனைகளும் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்லவில்லையே என்ற ஏமாற்றமே அவரது கண்ணீருக்குக் காரணமாக அமைந்தது. வைபவ் சூர்யவன்ஷி அழுத வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானதைத் தொடர்ந்து, முன்னாள் ஜாம்பவான்களும் ரசிகர்களும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications