36 வயது பவுலர் வீசிய தரமான யார்க்கர்.. ஒரு நொடி ஆட்டம் கண்ட விராட் கோலி.. உற்சாகமான ஆர்சிபி!
பெங்களூர்: ஆர்சிபி அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் வீசிய யார்க்கர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் நட்சத்திர வீரர் விராட் கோலி திணறிப் போன வீடியோ சோசியல் மீடியாவில் ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டிஃபெண்டிங் சாம்பியனான ஆர்சிபி அணி சிறப்பாக தயாராகி வருகிறது. ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் யாஷ் தயாள் ஆர்சிபி அணியின் பயிற்சியில் இதுநாள் வரை பங்கேற்கவில்லை. இதனால் யாஷ் தயாளை ஆர்சிபி அணி ரிலீஸ் செய்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி ஹேசல்வுட் மட்டுமல்லாமல் யாஷ் தயாளுக்கும் மாற்று வீரரை கண்டறிய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
அவரது இடத்தை நிரப்ப தான் ஆர்சிபி அணி இளம் வீரர் மங்கேஷ் யாதவ் என்பவரை ரூ.5.20 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அதேபோல் ரஷீக் சலாம் பெஞ்சில் இருக்கிறார். இதனால் ஹேசல்வுட் இடத்தை நிரப்புவது மட்டுமே ஆர்சிபி அணிக்கு சிக்கலாக உள்ளது. இந்த நிலையில் 36 வயதான புவனேஷ்வர் குமார் தரமான ஃபார்மில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய புவனேஷ்வர் குமார் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் இன்னும் புவனேஷ்வர் குமார் பழைய மாதிரி கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களிடையே இருக்கிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பயிற்சியில் விராட் கோலிக்கு பவுலிங் செய்து கொண்டிருந்தார் புவனேஷ்வர் குமார்.
அப்போது விராட் கோலியே எதிர்பார்க்காத வகையில் புவனேஷ்வர் குமார் ஒரு தரமான யார்க்கர் பந்தை வீச, மிரண்டுபோன விராட் கோலி திணறிப் போனார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதனால் இந்த சீசனில் புவனேஷ்வர் குமார் மீண்டும் பழைய ஸ்விங்குடன் கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications