தொடர்கதையாகிறது.. விடுதலைப் புலிகள் மற்றொரு புலனாய்வு பொறுப்பாளர் பிரபா கைது
கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் லெப். கேணல் பிரபா என்ற கலைநேசன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏராளமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள், தளபதிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் முகாம்களில் அடைக்கப்பட்டு பலர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
அத்துடன் மேலும் பலரது நிலைமை என்னவானது என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளாக இருந்த ராம், நகுலன் என பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தற்போது புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பொறுப்பாளராக இருந்த பிரபா என்ற கலைநேசன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள வீட்டில் இருந்த அவர் இன்று இலங்கை தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்ததாக கூறியே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.