இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை: சிறிசேனா அரசுக்கு காமன்வெல்த் பாராட்டு
கொழும்பு: உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, நீதி விசாரணை அமைப்பை ஏற்படுத்துவதில் உதவி செய்ய தயாராக உள்ளதாக காமன்வெல்த் அமைப்பின் தலைமைச்செயலாளர் கமலேஷ் சர்மா கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமலேஷ் சர்மா நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து நம்பத்தகுந்த விசாரணை நடத்துவதில் சிறிசேனா அரசு விருப்பம் கொண்டிருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.

‘‘சீர்திருத்தங்கள் கொண்டு வரும் நோக்கத்துடன் செயல்படுகிற புதிய அரசுக்கு உதவ தயாராக இருக்கிறோம். உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, நீதி விசாரணை அமைப்பை ஏற்படுத்துவதில் உதவி செய்ய தயாராக உள்ளோம்'' என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் ஜனவரி 9-ஆம்தேதிக்கு பின்னர் எடுக்கப்பட்டுள்ள சாதகமான நடவடிக்கைகளையும், எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகளையும் காமன்வெல்த் கவனத்தில் கொண்டுள்ளது. வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் ராணுவம் சாராதவர்கள் கவர்னர்களாக நியமனம்; தலைமை நீதிபதி (சிறுபான்மை தமிழர்) நியமனம் பாராட்டுக்குரியது'' என்றும் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications