கச்சத்தீவை திரும்ப கேட்காதீங்க-'உலகத் தமிழர் தலைவர்’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஈழத் தமிழர்கள் வேண்டுகோள்
யாழ்ப்பாணம்: இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என்று இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வலியுறுத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இலங்கையில் குறிப்பாக ஈழத் தமிழரிடம் கச்சத்தீவு குறித்த விவாதம் எழுந்துள்ளது. இலங்கையிடம் இருந்து இந்தியா கச்சத்தீவை திரும்பப் பெறக் கூடாது என்பது ஈழத் தமிழரின் நிலைப்பாடு.
உலகத் தமிழர் தலைவர்
இது தொடர்பாக இலங்கை வடக்கு மாகாண சபைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு மீட்பு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலையும் இதுபற்றி பேசியிருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நாங்கள் உலகத் தமிழர்களின் தலைவராகப் பார்க்கிறோம். உலகத் தமிழர் தலைவராகிய மு.க.ஸ்டாலினுக்கு ஈழத் தமிழரும் ஒன்றுதான்.. இந்திய தமிழரும் ஒன்றுதான்.
ஈழத் தமிழருக்கு பாதிப்பு
ஈழத் தமிழர்களுக்கு தமிழக மீனவர்களால் மட்டுமே பிரச்சனை இல்லை. தென்னிலங்கை சிங்கள மீனவர்களாலும் பிரச்சனை இருக்கிறது. மட்டக்களப்பு முதல் முல்லைத்தீவு வரை சிங்கள மீனவர்கள் ஈழத் தமிழர் கடல்வளத்தைச் சுரண்டி செல்கின்றனர். இதனால் ஈழத் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கோரிக்கையை கைவிடுக
ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக மீன்பிடிப்பது என்பது நெடுந்தீவு முதல் கச்சத்தீவு வரையில்தான். ஆகையால் கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெறுவது என்பது ஈழத் தமிழரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடும். இதனால் தமது கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கரிசனத்துடன் அணுக வேண்டும்.
பேச்சு மூலம் தீர்வு
இருநாட்டுத் தமிழர்களையும் தங்களது மக்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்க்க வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெறாமல் இருதரப்பு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சீ.வி.கே.சிவஞானம் கூறினார்.