நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சேவை வெல்ல வைக்க வியூகம் வகுக்கும் கோத்தபாய!!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சே வகுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்த நிலையில் அவரது ஒட்டுமொத்த குடும்பமே ஊழல் முறைகேட்டில் சிக்கியது. கடந்த 6 மாத காலமாக மகிந்த ராஜபக்சே அரசியல் துறவறம் பூண்ட கதையாக இருக்கிறார்.
இந்நிலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வென்று இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவது என்பதில் ராஜபக்சே சகோதரர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.
இதில் முதல் கட்டமாக சிறையில் இருந்த பசில் ராஜபக்சே ஜாமீனில் விடுதலை ஆகி இருக்கிறார். மற்றொரு சகோதரரான கோத்தபாய தற்போது மகிந்த ராஜபக்சேவை வெல்ல வைப்பதற்கான வியூகத்தில் களமிறங்கியுள்ளார்.
இதற்காக தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிக் கொண்டு மகிந்தவுக்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறாராம் கோத்தபாய. இப்படிச் செய்வதன் மூலம் மகிந்தவின் ஆதரவாளர்கள் எதிரணிக்கு தாவாமல் கண்காணிக்க முடியும் என்பதும் மற்றொரு கணக்காம்.
அத்துடன் தற்போது சிறிசேன பக்கம் இருப்பவர்களை மகிந்த அணிக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளையும் நடத்த கோத்தபாய திட்டமிட்டுள்ளாராம்.
இப்பவே இலங்கை தேர்தல் களைகட்டுதே!