இலங்கை நிலச்சரிவில் சிக்கியவர்களை உயிரோடு மீட்பதில் சிக்கல்
கொழும்பு: இலங்கையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும்போதிலும், மண்ணுக்குள் புதையுண்டவர்கள் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள பதுல்லா மாவட்டம் மலைப்பாங்கான பகுதி என்பதால் அங்கு ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் ஆவார்கள். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
இங்குள்ள கல்டுமுல்லா பகுதியில் உள்ள மீரியபெட்டா தேயிலை எஸ்டேட்டில் நேற்று முன்தினம் காலை திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டதில் தேயிலை தோட்ட தொழிலாளர் வசிக்கும் சுமார் 150 வீடுகள் அதில் புதைந்தன. மண்ணும் கற்களும் சகதியும் விழுந்து அமுக்கியதில் வீடுகள் இடிந்து நாசமாயின. இதனால் அந்த வீடுகளில் இருந்துவர்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இறந்து கிடந்தவர்களின் உடல்களையும் அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிலச்சரிவில் 200 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே மண்ணுக்கடியில் சிக்கியவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.