இலங்கை வடமாகாண தலைமைச் செயலருக்கு முதல்வர் விக்னேஸ்வரன் உத்தரவிடமுடியாதாம்: சொல்வது சுப்ரீம் கோர்ட்!
யாழ்ப்பாணம்: இலங்கை வடக்கு மாகாணத் தலைமை செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு இல்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாண தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார்.
அவரது தலைமையிலான அரசு எடுக்கும் முடிவுகளுக்கும், செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மாகாண ஆளுநரும் தலைமைச் செயலாளரும் இடையூறாக கருதிய முதல்வர் விக்னேஸ்வரன் தலைமைச் செயலாளரும், இதர அதிகாரிகளும் மாகாண ஆளுநரின் முடிவுகளுக்கு மட்டும் கட்டுப்படாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தி, அது தொடர்பான சுற்றறிக்கையினை வடக்கு மாகாண அரசின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார்.
ஆனால் விக்னேஸ்வரனின் இந்த அறிவுறுத்தலை எதிர்த்து தலைமை செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் என்பவர், முதல்வரின் இந்த சுற்றறிக்கை எனது பணிகளில் தலையீடு செய்வதாக அமைந்துள்ளது. என்னை பதவியில் நீக்கவும் அவர் முயற்சித்து வருகிறார்' என்று குற்றம்சாட்டி இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. அரசின் தலைமை செயலாளராக யாரை நியமிப்பது என்பது தேசிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அவர்களுக்கு உத்தரவிடும் அதிகாரமும் தேசிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு மட்டுமே உண்டு.
மாகாண தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் முதல்வருக்கு கிடையாது என்று அத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications